ETV Bharat / state

தமிழக மக்களே - அக்டோபர் 28 வரை குடையை மறந்துறாதீங்க!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 5:22 PM IST

அக்-28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
அக்-28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

Tamilnadu rain update: மத்திய வங்க கடல் பகுதிகளில் நாளை (அக்.25) சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் நாளை (அக்.25) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அக்டோபர் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வானிலை ஆய்வு மையம் கூறும் போது, "மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 5.30 மணி அளவில் ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று (அக்-24) அதிகாலை 02.30 மணி அளவில் அதிதீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக் கொண்டுள்ளது.

இது இன்று (அக்.24) காலை 08.30 மணியளவில் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக அதிதீவிர புயலாக மாறியுள்ளது. மேலும், வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை கெபுபரா (Khepupara) மற்றும் சிட்டகாங் (Chittagong) இடையே 25ஆம் தேதி மாலை கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

மேலும், மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர ‘தேஜ்’ புயல் இன்று (24-10-2023) காலை 02.30-03.30 மணி அளவில் தெற்கு அல்-கைதா (Al-ghaidah)க்கு மிக அருகில் ஏமன் கடற்கரையில் கரையை கடந்தது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானிலை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழைப்பதிவு: கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவில் அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு பகுதியில் 10 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 7 செ.மீ மழையும், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 6 செ.மீ மழையும், மேலும் கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 4 செ.மீ முதல் 1 செ.மீ வரையிலான மழையும் பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: நாளை (அக்.25) மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். இதே போல் நாளை ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிதீவிர புயலாக மாறிய 'ஹமூன்' - எந்தெந்த மாநிலத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.