ETV Bharat / state

சென்னை குற்றச்செய்திகள்: செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 10:16 PM IST

Chennai Crime News
சென்னை குற்றச்செய்திகள்

Chennai Crime News: செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர், உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரைத் தாக்கிய போதை ஆசாமிகள் உள்ளிட்ட சென்னையில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களை இங்கு காணலாம்...

சென்னை: செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னை தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்..!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். மேலும் ஆய்வாளருக்கு வாகன ஓட்டுநராகவும் சந்திரசேகர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு சந்திரசேகர் வீட்டிற்குச் சென்று உள்ளார். இந்த நிலையில் அடுத்த நாள் காலை ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலைய போலீசாரால் தலைமைக் காவலர் சந்திரசேகர் உட்பட 14 பேரை செம்மரம் கடத்தியதாகக் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் மூன்று டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.

பின்னர், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செம்மரக்கடத்தல் வழக்கில் தலைமைக் காவலர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்திப்ராய்ரத்தோர் செம்மரம் கடத்தல் வழக்கில் சிக்கிய தலைமைக் காவலர் சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

சென்னையில் உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரைத் தாக்கி விட்டுத் தப்பிய இருவரில் ஒருவரைக் கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்..

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மூப்பனார் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் (டிச 19) இரவு இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிக வேகமாகச் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற பெண் ஒருவர் மீது அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் லேசாக மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளனர்.

அப்போது, அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் ஒருவர் பெண்ணிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்துவிட்டுக் காவல் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடமும் விசாரணை செய்துள்ளார் அப்போது அவர்கள் போதையில் உதவி ஆய்வாளர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆத்திரம் அடைந்த இருவரும் உதவி ஆய்வாளரைத் தாக்கி விட்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காயமடைந்த உதவி ஆய்வாளரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் பின்னர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி உதவி ஆய்வாளரைத் தாக்கிய இருவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலும் ஒருவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கஞ்சா வியாபாரிகளின் முன்விரோத கொலை..!

சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (40) இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், கடந்தாண்டு புளியந்தோப்பு பகுதியில் ரவுடி சேட்டு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரேம்குமார் கைதாகி இருந்தார்.

இந்த நிலையில், அண்மையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முன்தினம் பிரேம்குமார் சென்னை ரிப்பன் மாளிகை எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட மர்மநபர்கள் பிரேம்குமாரை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெரிய மேடு போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி பெரிய மேடு போலீசார் மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வைத்து இந்த கொலை வழக்கு சம்பந்தமாக ஆறு பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரவுடி பிரேம்குமாரின் சகோதரர் சஞ்சய் என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு கஞ்சா வியாபார போட்டியில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவுடி சேட்டு என்பவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் பழிக்குப் பழி கொலையாகக் கடந்த 2022ஆம் ஆண்டு ரவுடி சேட்டுவை சஞ்சயின் சகோதரர் பிரேம்குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: உடந்தையாக இருந்த பெண் அதிகாரி உட்பட 2 பேர் கைது.. !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.