ETV Bharat / state

ஆங்கில கால்வாயை இருமார்க்கத்திலும் நீந்தி கடந்து சாதனைப் புரிந்த தமிழக மாணவன்

author img

By

Published : Jul 27, 2023, 7:27 PM IST

இங்கிலாந்து பிரான்ஸ் நாட்டின் இடையே கடலில் அமைந்துள்ள ஆங்கில கால்வாயை கடந்து தமிழக மாணவன் சாதனை!
இங்கிலாந்து பிரான்ஸ் நாட்டின் இடையே கடலில் அமைந்துள்ள ஆங்கில கால்வாயை கடந்து தமிழக மாணவன் சாதனை!

ஆங்கில கால்வாயை இரு மார்க்கத்திலும் நீந்தி கடந்து சாதனைப் படைத்த இந்திய வீரர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனி மாவட்ட மாணவர் சினேகனும் பங்கேற்று அசத்தியுள்ளார்.

ஆங்கில கால்வாயை இருமார்க்கத்திலும் நீந்தி கடந்து சாதனை புரிந்த தமிழக மாணவன்

சென்னை: இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் இடையே கடலில் அமைந்துள்ள ஆங்கில கால்வாயை இரு மார்க்கத்திலும் சுமார் 72 கிலோமீட்டர் தூரம் நீந்தி, ஆறு பேர் கொண்ட இந்திய நீச்சல் வீரர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன் சினேகன் என்பவர் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டிற்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே கடலில் 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்கில கால்வாய் அமைந்துள்ளது. இதில் இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் நாட்டு வரைக்கும் மீண்டும் பிரான்சிலிருந்து இங்கிலாந்து நாட்டு வரைக்கும் என இரண்டு வழி தடங்களிலும் என 72 கிலோமீட்டர் தூரம் நீந்தி சாதனைப் படைக்க இந்திய நீச்சல் குழு திட்டமிட்டது.

இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு தயாராகி வந்தனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி, இந்திய நீச்சல் குழுவைச் சேர்ந்த ஆறு பேரும் இங்கிலாந்து நாட்டில் இருந்து பிரான்ஸ் வரை 36 கிலோ மீட்டர் தூரமும்; மீண்டும் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து வரை 36 கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 72 கிலோமீட்டர் ரிலே முறையில் நீந்தி சாதனைப் படைத்தனர்.

கடும் குளிர் நிலவும் இந்த கால்வாயில் சுறா மீன்களும், நீர் நாய்களும், ஜெல்லி மீன்களும் மிகவும் ஆபத்தான நீரோட்டமும் காணப்படும் இப்பகுதியில் இவர்கள் 31 மணி நேரம் 29 நிமிடங்களில் இருமார்க்கத்திலும் 72 கி.மீ கடந்து சாதனைப் புரிந்துள்ளனர்.

ஆங்கில கால்வாயை நீந்தி சாதனை படைத்த ஆறு பேர் கொண்ட இந்திய குழுவில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சினேகன்(15) இடம் பெற்று, இச்சாதனையைப் படைத்துள்ளார். சாதனை படைத்துள்ள இந்திய நீச்சல் குழுவுக்கு விஜயகுமார் என்பவர் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இதையடுத்து இன்று சென்னை விமான நிலையம் வந்த மாணவன் சினேகன், பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோருக்கு உறவினர்கள் மற்றும் நீச்சல் ஆர்வலர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

இதையும் படிங்க: World Silambam Competition: 3-வதுமுறையாக தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த மாணவர்கள்!

பின்னர் செய்தியாளரிடம் பேசிய விஜயகுமார், ''நான் தேனி மாவட்டத்தில் நீச்சல் பயிற்சியாளராக உள்ளேன். மாணவன் சினேகன் என்னிடம் எட்டு வருடமாக நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார். சினேகன் இதற்கு முன் தலைமன்னார், தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி சாதனைப் படைத்துள்ளார்.

அதேபோல் கடந்த ஆண்டு அயர்லாந்து - ஸ்காட்லாந்து இடையே கடலில் நீந்தி இளம் வயதில் சாதனைப் புரிந்தவர் என்று பட்டத்தைப் பெற்றார். தற்போது மூன்றாவதாக பிரான்ஸ், இங்கிலாந்து இடையே உள்ள ஆங்கில கால்வாயை கடந்து சாதனைப் படைத்துள்ளார். 18 வயதுக்குள் உலகளவில் கடலில் உள்ள 7 கால்வாய்களை நீந்தி சாதனைப் படைக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.

இதற்கு முன் குற்றாலீஸ்வரன் எனும் மாணவன் இளம் வயதில் கடலில் நீந்தி சாதனைப் படைத்தது போல், இவரும் சாதனைப் படைத்து அர்ஜுனா விருது போன்ற விருதுகளை பெறவேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி எடுத்து வருகிறார். மகாராஷ்டிரா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நீச்சல் வீரர்கள் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் சினேகன் மட்டுமே பங்கேற்றார். நான் இந்திய அணியின் பயிற்சியாளராக கலந்துகொண்டேன்.

கடந்த 2012ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து குற்றாலீஸ்வரன், தனி ஆளாக ஆங்கில கால்வாயை ஒரு மார்க்கத்தில் மட்டும் கடந்து சாதனைப் படைத்தார். அதன் பிறகு தேனி மாவட்டத்தில் இருந்து சினேகன் ஆங்கில கால்வாயில் இரு மார்க்கத்தையும் கடந்து சாதனைப் படைத்துள்ளார்” என அவர் கூறினார்.

மாணவர் சினேகன் கூறுகையில், “இங்கிலாந்து பிரான்ஸ் நாட்டிற்கு இடையே கடலில் அமைந்துள்ள ஆங்கில கால்வாயில் இந்தியாவைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் குழு, இரு மார்க்கத்திலும் நீந்தி கடந்து சாதனைப் படைத்துள்ளோம். இந்தியாவில் இருந்து இதுவரை யாருமே இருமார்க்கத்திலும் நீந்தி சாதனைப் படைக்கவில்லை. தற்போது நாங்கள் சாதனைப் படைத்துள்ளோம்.

கடந்த ஒரு வருடமாக இதற்காகப் பயிற்சி எடுத்துள்ளோம். உலக அளவில் கடலில் உள்ள ஏழு கால்வாயில் மூன்றை நான் நீந்தி முடித்துள்ளேன். மீதமுள்ள நான்கு கால்வாய்களையும் நீந்தி சாதனைப் படைக்க வேண்டும். ஒலிம்பிக்கில் பங்கேற்றும் சாதனைப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறேன். தமிழக முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற வேண்டும்”, என அவர் கூறினார்.
இதையும் படிங்க: தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் சென்னை சிறுவன் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.