ETV Bharat / state

எண்ணூரில் எண்ணெய் கசிவு குறித்து தமிழ்நாடு மேலாண்மைக் குழு இன்று (டிச.11) ஆய்வு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 4:32 PM IST

தமிழ்நாடு மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மைக் குழு இன்று எண்ணூரில் ஆய்வு
தமிழ்நாடு மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மைக் குழு இன்று எண்ணூரில் ஆய்வு

Ennore oil spill issue: எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தமிழ்நாடு மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மைக் குழு இன்று (டிச.11) ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

சென்னை: பெட்ரோலிய நிறுவனங்களிலிருந்து வெளியேறிய எண்ணெய் கசிவு, சென்னை பக்கிங்கம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை (கொற்றலை) ஆற்றில் பாய்ந்து நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்தது. இந்த எண்ணெய் கழிவுகளின் கசிவு எண்ணூர் பகுதி ஆற்றில் மட்டுமல்லாது எண்ணூர் பகுதி சுற்றுவட்டாரத்திலும் பரவி இருந்தது.

பக்கிங்கம் கால்வாயில் எண்ணெய் கசிவு கலந்திருந்த நிலையில், அதிக மழைப்பொழிவு காரணமாகக் கால்வாய் வழியாகச் சென்ற மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்தது. இதன் காரணமாக எண்ணூர் பகுதி மட்டுமல்லாது பக்கிங்கம் கால்வாய் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பல குடியிருப்புகளில் எண்ணெய் கழிவுகள் சூழ்ந்தன.

இந்த எண்ணெய் கழிவு சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், பாரதி நகர் என சுமார் 700க்கும் மேற்பட்ட வீடுகளிலும், 400க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளிலும் எண்ணெய் படலமாகச் சூழ்ந்தது. இதனை அடுத்து எண்ணெய் படலம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்யத் தேசிய பசுமை தீர்ப்பாயம் உயர்மட்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த குழு அளிக்கின்ற ஆய்வின் அறிக்கையையும் மற்றும் அதனடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் வழங்கும் உத்தரவுகளையும் ஏற்றுத் தமிழக அரசு செயல்படும் என நேற்று (டிச.10) தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மைக் குழு இன்று (டிச.11) கூடுகிறது.

எண்ணூர் முகத்தூவாரம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சூழ்ந்த எண்ணெய் கசிவுகள் தொடர்பாகத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைத்த தொழில்நுட்பக் குழு இன்று மேற்கொள்ளும் ஆய்வின் முடிவுகள் இன்றே SOS - CMGவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மேலும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் 20 பேரை உறுப்பினராகக் கொண்ட தமிழக அரசு அமைத்துள்ள தமிழ்நாடு மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மைக் குழுவும் இன்று எண்ணூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

எண்ணூர் பகுதியில் எந்த வழியில் இந்த எண்ணெய் கழிவுகள் வெளிவந்தன?, எவ்வளவு தூரத்திற்கு எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளன?, இதன் பாதிப்புகள் என்ன?, இதனால் அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என பல கோணங்களில் இந்த குழு ஆய்வினை மேற்கொள்ளவுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை அரசிடம் ஒப்படைத்த பிறகு எண்ணெய் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வெள்ளப் பாதிப்பால் சேதமடைந்த அரசு ஆவணங்கள், பள்ளி சான்றிதழ்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் ஏற்பாடு.. எந்தெந்த பகுதிகள்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.