ETV Bharat / state

போராட்டம் வாபஸ்! பேச்சுவார்த்தை விளக்கக்கூட்டம் நடக்கும் - தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் முடிவில் மாற்றம் ஏன்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 10:23 PM IST

Etv Bharat
Etv Bharat

TN Primary education teachers protest withdraw: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், 'நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் பேச்சுவார்த்தை விளக்கக்கூட்டமாக நடைபெறும்' என அறிவித்துள்ளனர்.

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன அலுவலகத்தின் முன்னாள் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இயக்குனருடன் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காலையில் தயாராக இருந்தார். ஆனால், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வராததால் காலை முதல் தனது முகாம் அலுவலகத்தில் காத்திருந்தார்.

ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மாலை 5 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி உடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரின் முகாம் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், தாஸ், வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் கூறும்பொழுது, 'பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் 11 கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. முக்கிய கோரிக்கையான EMIS இணையதளத்தில் பதிவுகளை நவம்பர் 1 ஆம் தேதி முதல் செய்யத் தேவையில்லை என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இனி மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு மற்றும் பதிவு செய்தால் போதும்' என தெரிவித்தனர்.

புதிதாக 58 மாவட்டங்களில் டிஐ பணியிடங்கள்: மேலும் கூறுகையில், 'எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் மூலம் பதிவேற்றங்களில் இருந்து விடுவித்து விடுவது எனவும் தெரிவித்துள்ளனர். பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை மாதம்தோறும் நடத்துவதற்கு பதில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி பயின்றவர்களுக்கான பின்னேற்பு அனுமதி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொடக்கக்கல்வித்துறையில் 58 மாவட்டங்களில் டிஐ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. ஆசிரியர்களை ஆசிரியர் பயிற்றுநர்களாக நியமிப்பதில் இருந்து மூன்று மாதத்தில் நிறுத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான வழக்கு பதிவு ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு 2006 ஜூலை ஒன்றாம் தேதிக்கு பின்னர் மத்திய அரசுக்கு இணையாக வழங்கிடுவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் பேச்சுவார்த்தை விளக்கக்கூட்டமாக நடைபெறும்' என விளக்கினர்.

இதையும் படிங்க: "மத்தியில் மோடியின் நல்லாட்சி; மாநிலத்தில் விஜயின் மக்களாட்சி" - ஹெட்லைன் செய்தி பாணியில் விஜய் ரசிகர்களின் போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.