ETV Bharat / state

உயிர் பிழைக்க வரும் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க ஆக்கப்பூர்வ திட்டங்களை மேற்கொள்ள வலியுறுத்தல்

author img

By

Published : Mar 25, 2022, 11:06 AM IST

தமிழகத்திற்கு வரும் இலங்கைத் தமிழர்
தமிழகத்திற்கு வரும் இலங்கைத் தமிழர்

தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்விடங்களை வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக தரவேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாள்தோறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாத இலங்கையில் இருந்து மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகி வருகிறது.

இதனிடையே, சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதி நிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்குப் பதிலுரை நேற்று (மார்ச்.24) நடைபெற்றது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் பதிலுரைக்குப் பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழகத்திற்கு வரும் இலங்கைத் தமிழர்
தமிழகத்திற்கு வரும் இலங்கைத் தமிழர்

விடிவு நிச்சயம்: அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இலங்கைத் தமிழர்கள் இன்றைக்குப் பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில், அங்கு பரிதவித்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழர்கள் அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்ற செய்திகளையெல்லாம் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதுபோன்ற சூழலில் ஒன்றிய அரசுடன் தொடர்புகொண்டு, இந்த விவகாரத்தை எப்படி கையாளவேண்டும் என்று ஆலோசித்து வருவதாகவும்; இதற்கு நிச்சயம் விடிவு காலத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கையிலிருந்து வரும் தமிழர்களை எவ்வாறு சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்று நேற்று அரசு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு வழங்கப்பட்டு இதுகுறித்து மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்து வருவதாக ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.

உயிர் பிழைக்க வரும் ஈழத் தமிழர்கள்
உயிர் பிழைக்க வரும் ஈழத் தமிழர்கள்

இதனிடையே, தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்விடங்களை வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக தரவேண்டும் என ஒன்றிய அரசுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொப்புள்கொடி உறவுகள்: இது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை குடிமக்களில் தமிழர்கள் கடும் பஞ்சத்தால் - வறுமையால் அவதிப்படுகிற நிலையில், ‘‘பஞ்சம்‘’ காரணமாக வேறு வழியின்றி மீண்டும் ‘ஏதிலிகளாக’ எம் தொப்புள்கொடி உறவுகள் தமிழ்நாடு நோக்கி வருவோருக்கு ஆதரவுக் கரத்தை, மனிதாபி மானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு திமுக அரசு, வழங்கி சட்டப்படி உதவிகள் செய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கூறியிருப்பது, கருணை மழை பொழிந்ததாகவே கருதி வரவேற்கப்படவேண்டும். நிலைமை சரியாகும் வரை அவர்களுக்கு தமிழ்நாடு ஆதரவு காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு..?
அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு..?

ஆதரவு அளிக்க வேண்டியது கடமை : மேலும் இது தொடர்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் நமது தொப்புள் கொடி உறவான தமிழர்கள் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக தமிழகம் வரத்தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. அப்படி வருகிறவர்களை எந்தவித இன்னலுக்கும் ஆளாக்காமல் ஆதரவளிக்க வேண்டிய கடமை தாய்த் தமிழகத்தின் அரசுக்கு இருக்கிறது.

இலங்கைத் தீலிருந்து தப்பி ராமேஸ்வரம் தீவுக்கு படையெடுக்கும் ஈழத்தமிழ் அகதிகள்
இலங்கைத் தீலிருந்து தப்பி ராமேஸ்வரம் தீவுக்கு படையெடுக்கும் ஈழத்தமிழ் அகதிகள்

கரை சேர்க்க வேண்டும்: தமிழகத்தையொட்டிய கடற்பகுதியிலுள்ள திட்டுகளில் நிராதரவாக இறக்கிவிடப்படும் இலங்கைத் தமிழர்களை கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் பாதுகாப்பாக அழைத்து வந்து கரை சேர்க்க வேண்டும். இப்பணிகளை உள்ளார்ந்த அக்கறையோடு மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை

கனிவுடன் கேட்ட முதலமைச்சர்: இது குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கூறியுள்ளதாவது, "தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழர்கள் போதுமான வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். மேலும் இதுகுறித்து (மார்ச்.24) காலை முதலமைச்சரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துத் தப்பி வரும் அவர்களில் பெண்கள் குழந்தைகளை அகதி முகாம்களிலும், ஆண்களை புழல் சிறையிலும் அடைப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து எடுத்துரைத்தேன்.

ஈழத்தமிழர்களின் துயர் துடைப்பதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

தமிழர்களின் பண்பாடும் அல்ல: அதைக் கனிவுடன் கேட்ட முதலமைச்சர் விரைவில் ஒன்றிய அரசுடன் பேசி இந்த சிக்கலை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். இது ஒருபுறமிருக்க, இலங்கையில் இருந்து பெரும் கவலையோடு வரும் ஈழத்தமிழர்களை, தமிழ்நாட்டிற்கு அழைத்து வர, தமிழ்நாட்டை சேர்ந்த படகு உரிமையாளர்கள் பெரும் தொகையை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இது அதிர்ச்சி ஏற்படுத்துவதோடு, வேதனையளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

  • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது!https://t.co/HesksJcsIw pic.twitter.com/cX6ZhlTI27

    — சீமான் (@SeemanOfficial) March 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மனவேதனையை தருகிறது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து, அந்நாட்டுக் குடிமக்கள் அன்றாட செலவினங்களைக்கூட எதிர்கொள்ள முடியாது, வறுமைக்கும், ஏழ்மைக்கும் உள்ளாகி, தவித்து வருகிற செய்திகள் கவலையளிக்கின்றன.

சிங்கள இனவெறிப்பிடித்து, தமிழர்களை அழித்தொழிக்க, உலகெங்கும் கடன்களை வாங்கிக்குவித்து, நாட்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிலும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தாத கொடுங்கோல் சிங்கள ஆட்சியாளர்களின் இனவெறிச் செயல்பாடுகளே இத்தகைய நிலைக்குக் காரணமென்றாலும், இன்றைக்கு தமிழர்களும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகி நிற்பது பெரும் மனவேதனையைத் தருகிறது.

இவ்வளவு ஆண்டுகளாக, சிங்கள ஆட்சியாளர்களின் இன ஒதுக்கல் நடவடிக்கைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு, கொடும் துயரத்திற்கு ஆளாகி நின்ற தமிழ்ச்சொந்தங்கள், இப்போது பொருளாதார நெருக்கடியினாலும், வறுமையின் கோரப்பிடியினாலும் வாடி வதங்கி, வாழ்க்கையை நடத்த முடியாத துயர்மிகு சூழலில், நாளும் அல்லல்பட்டு வருவது பெரும் மனவலியைத் தருகிறது.

துன்பத்திற்குள்ளாக்குவது கொடுமை: இத்தகைய கையறு நிலையில், தாய்த்தமிழகத்தில் தஞ்சம்கேட்டு, கடல்வழியாக, படகுகளின் மூலம் அடைக்கலம் தேடிவரும் ஈழச்சொந்தங்களை வழக்குகள் போட்டு கைது செய்வது மேலும் துன்பத்திற்குள்ளாக்குவது கொடுமை. அதிலும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரித்து சிறையிலும் முகாம்களிலும் அடைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

  • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் நமது தொப்புள் கொடி உறவான தமிழர்கள் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக தமிழகம் வரத்தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. அப்படி வருகிறவர்களை எந்தவித இன்னலுக்கும் ஆளாக்காமல் ஆதரவளிக்க வேண்டிய கடமை தாய்த் தமிழகத்தின் அரசுக்கு இருக்கிறது. (1/2)

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) March 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அனைத்தையும் இழந்து வரும் நம்மக்களை ஆரத்தழுவி அரவணைத்து, திபெத்திய ஏதிலிகளுக்கு இந்நாடு வழங்கியிருக்கிற சலுகைகளையும், வசதிகளையும் போல, நம் சொந்தங்களுக்கும் செய்துகொடுத்து, அவர்களைக் காக்க முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நோக்கி தாய் உறவுகள்: இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை குழு தலைவர் சிந்தனை செல்வன் நம்மிடம் பேசிய பொது," இடையறாத உள்நாட்டுப் போரால் இன அழிப்பு நடவடிக்கையால் இலங்கையின் பொருளாதாரம் மிகக்கடுமையான உச்சத்தின் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதன் விளைவாக இலங்கை வாழ் ஈழத்தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கடல்வழியாக தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகின்ற நிலை என்பது தொடர்ந்து இருக்கிறது.

இன அழிப்பு எவ்வாறு அவர்களை அகதிகளாகக் கொண்டு வந்து தமிழகத்திற்குச் சேர்த்ததோ அதேபோல பொருளியல் சிக்கல் காரணமாக மீண்டும் அகதிகளாகத் தமிழ்நாடு நோக்கி தாய் உறவுகள் வரும் நிலையை வைக்க உள்ளது. இவ்வாறு வரும் ஈழத்தமிழர்களை தாயுள்ளதோடு எந்தெந்த வகையில் அரசு அவர்களுக்கு உதவ முடியும் என்பதை ஆய்ந்து புதிய திட்டங்களை மேற்கொள்வோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிமொழியை தந்துள்ளார். இது பாராட்டுக்குரியது.

ஆகப்பெரிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது: இலங்கை தமிழர்கள் ஈழத் தமிழர்கள் விவகாரம் என்பது பண்பாட்டு ரீதியாகத் தமிழகத்திற்கு நெருக்கமானது என்றாலும்கூட அதிகாரப்பூர்வமாக அரசியல் பூர்வமாக அரசாங்கம் பூர்வமாக அருகாமை அயல்நாடு என்ற நிலையில் இருக்கிறது. அயல்நாடு நிலையிலிருந்து இந்த பிரச்சனையைக் கருணை உள்ளத்தோடு கையாள வேண்டிய ஆகப்பெரிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். ஆகவே மத்திய அரசு தமிழ்நாடு அரசோடு கலந்து பேசி ஈழத்தமிழர்களின் துயர் துடைப்பதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினார்.

மேலும் இதுகுறித்து நம்மிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா, "ராஜபட்சே அரசுகள் இலங்கையிலேயே கடைப்பிடிக்கக் கூடிய மிக மோசமான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக ஒட்டுமொத்த இலங்கை மக்களும் மிகப்பெரிய ஒரு பொருளாதார பேரிடருக்கு இலக்காகப்பட்டுள்ளனர்.

அவர்களை அரவணைப்பது தமிழ்நாட்டின் கடமை: இந்த சூழ்நிலையில் தங்களுடைய தாய் பூமியாகத் தமிழ்நாட்டை கருதி இங்கு புகழிடம் தேடி வரக்கூடிய தமிழர்களை இருகரம் கூப்பி வரவேற்று அவர்களை அரவணைப்பது தமிழ்நாட்டின் கடமை, இந்தியாவின் கடமை அதனை இந்த சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். அப்படி வரக்கூடியவர்களைப் புழல் சிறையில் அடைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல அவர்களை அரவணைக்கக் கூடிய பணியை ஒன்றி அரசு செய்ய வேண்டும் அதற்குத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.

குற்றவாளியாகச் சித்தரிக்கும் போக்கு சரியானது அல்ல: இப்படி தமிழ்நாட்டை நாடி வரக்கூடிய இலங்கை சொந்தங்களை சிறப்பான முறையில் வாழ்விடங்களை வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக தரவேண்டும். இலங்கைத் தமிழர்களை பிடித்து அவர்களைக குற்றவாளியாக சித்தரிக்கும் போக்கு சரியானது அல்ல, அவர்கள் எல்லாம் அகதிகளாக வருகிறார்கள், எனவே அகதிகள் என்ற அடிப்படையிலே அவர்களுக்கு எல்லா வகையான அரவணைப்பு களையும் தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.