சென்னை: மடுவங்கரை பகுதியில் இன்று (டிச.26) 16ஆவது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மே 7ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போடும் பணிகள் இயக்கமாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்று 16ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 8 கோடியே 14 லட்சத்து 60 ஆயிரத்து 768 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 85% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 56% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் 80 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 95 லட்சமாக இருக்கிறது. அவர்களின் விவரங்களை தயார் செய்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநராட்சியில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
100 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி?
தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு, அதில் 12 பேர் குணமடைந்து வீடு திருப்பி உள்ளனர். 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 100க்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரான் முதல்நிலை அறிகுறியுடன் இருக்கின்றனர். அவர்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஜூலை 3ஆம் தேதி முதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. 6 லட்சத்து 81 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
15-18 வயதினருக்கு தடுப்பூசி
ஒன்றிய அரசின் அறிவிப்பு படி 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி தடுப்பூசி செலுத்தப்படும். தமிழ்நாட்டில் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் 15 முதல் 18 வயதில் உள்ளனர். ஜனவரி 3ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மாநகராட்சி பள்ளியில் 15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் அன்றே நடைபெறும்.
ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயதை கடந்த 1.04 கோடி பேருக்கும், முன்களப்பணியாளர்கள் 9.78 லட்சம் பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தம் பணிகள் தொடங்கப்படும்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 39 பேருக்கு எஸ்ஜீன் டிராப் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் முடிவுகள் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Karnataka Night curfew:அதிகரிக்கும் ஒமைக்ரான் - கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல்