ETV Bharat / state

சுதந்திரத்தின்போது காவிரி பிரச்னை இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 6:29 PM IST

rajbhavan tamilnadu governor rn ravi celebrate Uttarakhand formation day
சுதந்திரத்தின் போது காவிரி பிரச்சனை இல்லை - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி!

Tamil Nadu Governor RN Ravi: சுதந்திரத்தின்போது தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் காவிரி பிரச்னை இல்லை எனவும், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு பிறகு இந்த பிரச்னை உருவாகி உள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை: உத்தரகாண்ட் மாநிலம் உருவான தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் இன்று (நவ.9) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, "மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினத்தை, அந்தந்த மாநில அரசுகள் கொண்டாடும். ஆனால், பிரதமரின் உத்தரவுப்படி, அனைத்து மாநில தினத்தையும், அனைத்து மாநிலங்களும் கொண்டாடுகின்றன.

  • 'தேவபூமி' உத்தராகண்ட் மக்களுக்கு அவர்களின் மாநிலம் உருவான நாளில் இதயபூர்வ வாழ்த்துக்கள். வளமான ஆன்மிக பாரம்பரியம், கண்கொள்ளா அழகு, விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற அம்மாநிலம், நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளது. வரும் காலங்களிலும் அம்மாநிலம் தொடர்ந்து செழிக்கட்டும். pic.twitter.com/K0a4o8XXpI

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காலணிய ஏகாதிபத்தியத்தின்போது அனைத்து இந்தியாவும் சேர்ந்து எதிரி நாடுகளை எதிர்த்துப் போராடியது. குறிப்பாக, பிரிட்டிஷை எதிர்த்து மொத்த இந்தியாவும் ஒருங்கிணைந்து நின்றது. 1801-இல் சிவகங்கையிலிருந்து மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து 20 வருடம் போராடினர். ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியர்கள் ஒன்றாக இருந்தனர்.

ஆனால், ஆங்கிலேயர்கள் அவர்களிடையே பிரிவை ஏற்படுத்தினர். அந்தப் பிரிவு வகுப்புவாத பிரிவாக இருந்தது. அனைத்தையும் கடந்து ஒவ்வொரு முறை பிரச்னை வந்த போதும் இந்தியா ஒரு முகமாக இருந்தது. அதன்பின், அரசியல் மாநில அளவில் மாறியது. மாநில அரசியலால் பயன் அடைந்தவர்கள், மேலும் மாநிலங்களைப் பிரிக்கத் தொடங்கினர். மாநிலங்களில் வகுப்புவாதத்தால் பிரிந்த மக்கள், தங்களை அந்த அடையாளத்தோடு குறிப்பிடத் தொடங்கினர். இங்கு இருக்கக் கூடிய மலையாளிகள், தெலுங்கர்கள் தங்களை சிறுபான்மைகளாக குறிப்பிடுகிறார்களே தவிர, இந்நாட்டின் குடிமக்களாக கருதுவதில்லை.

தமிழ்நாடும், கர்நாடகாவும் காவிரி நீருக்காகப் போராடுகின்றன. நம்மால் அதை ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆனால், சுதந்திரம் பெற்றபோது ஒரே நாடாக இருந்தோம். அப்போது, இது போன்ற பிரச்னை இல்லையே, பாரதம் ஒரு நாடு என்ற உணர்வு மங்கி வருகிறது. தமிழ்க் கலாச்சாரம், மலையாள கலாச்சாரம் என்றெல்லாம் சொல்கின்றனர். இவையெல்லாம், 1926-க்கு முன்பு என்ன கலாச்சாரமாக இருந்தது எனச் சொல்ல முடியுமா எனக் கேட்டால் பதிலில்லை.

மாநிலங்கள் பிரிந்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்புதான். நம் பாரத கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தது. கன்னியாகுமரியிலிருந்து வடக்கு நோக்கி கிளம்பினால் ஒவ்வொரு 50கிமீ-க்கும் கலாச்சாரம் மாறும். ஒவ்வொரு 50 கிமீ-க்கும் மொழி மாறும். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா என்கின்றனர். வேற்றுமையே இல்லாததுதான் பாரதம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

நம்மை ஆள நினைத்த நாடுகளில்தான் வேற்றுமை உள்ளது. யாரென்றே தெரியாத மனிதக் கூட்டங்கள் ஒன்றிணைந்தால்தான் அது வேற்று நபர்கள் என்ற உணர்வைக் கொடுக்கும். நம் பாரதத்தில் ராமேஸ்வரத்தில் ஒருவருக்கு இருக்கும் கோத்திரம்தான் எதிர் மூலையில் இருக்கும் வேறு ஒருவரது கோத்திரமாகவும் இருக்கும். இதுதான் நமக்குள் இருக்கும் உறவுத் தொடர்பாகும்.

மாநிலங்கள் என்பவை நிர்வாகக் காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்டது என்பதையும், பாரதம்தான் நம் அடையாளம் என்பதையும் நாம் உணர வேண்டும். அமெரிக்காவும், ஐரோப்பியாவும் கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் பணக்கார நாடுகளாக இருக்கின்றன. ஆனால், இந்தியா அதற்கு முன்பே பொருளாதார சக்தி மையமாக இருந்தது.

மெட்ராஸ்க்கு 1840-இல் ஆயிரம் மெட்ரிக் டன் இரும்புடன் ஒரு கப்பல் வந்தது. ஒரு கிலோ கூட இங்கு விற்பனையாகவில்லை. ஏன் எங்கள் இரும்பை யாரும் வாங்க வரவில்லை எனக் கேட்டபோது, அப்போதைய ஆளுநர் இங்கு இரும்பு உருவாக்குவது குடிசைத் தொழிலாக இருக்கிறது. தேவைக்கு அதிகமாக வாங்க மாட்டார்கள் எனக் கூறிய பிறகு, பிரிட்டிஷ் அதிகாரிகள் இரும்புத் தொழிலை மெட்ராஸிலிருந்து அழித்தனர்.

ஒரு மாநிலத்தின் தினத்தைக் கொண்டாடுவது அரசியல் காரணங்களுக்காகக் கொண்டாடுவது அல்ல. அது பாரதத்தின் சிறப்பம்சத்தைக் கொண்டாடுவது. உத்தரகாண்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என உங்களைக் கருத வேண்டாம். இதுவும் உங்கள் வீடுதான்" எனத் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்.என்.ரவி மேடையில் கவுரவித்தார். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சென்னையில் வசிக்கக் கூடிய பலர் விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் புதிதாக 28 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டம்" - அமைச்சர் எ.வ.வேலு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.