ETV Bharat / state

Exclusive : அதிகரிக்கிறதா நீட் ஆர்வம்?: தேர்வு முடிவுகள் கூறுவது என்ன?

author img

By

Published : Jun 17, 2023, 10:04 AM IST

Updated : Jun 17, 2023, 12:16 PM IST

நீட் தேர்வுக்கு ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்!
நீட் தேர்வுக்கு ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்!

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்ற மாணவர்களின் தொகுப்பு.

சென்னை: தேசிய அளவில் நடைபெற்ற 2023 நீட் தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளியானது. 2022-2023ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 44ஆயிரத்து 516 மாணவர்கள் எழுதிய நிலையில், 78 ஆயிரத்து 693 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 997 மாணவர்கள் எழுதி 3,982 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 31 சதவீத மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கும், கால்நடை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் மே மாதம் ஏழாம் தேதி 499 நகரங்களில் 4097 மையங்களில் நடத்தப்பட்டன.

இந்நிலையில், நீட் தேர்வு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் அவர்களின் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி மற்றும் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களைக் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்:

2022-2023 நீட் தேர்வில் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர் பிரபஞ்சன் முதல் முறையாக 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்து தேசிய அளவிலான தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தில் பிடித்து சாதனை புரிந்தார். தேசிய அளவில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 596 மாணவர்கள் எழுதியதில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 மாணவர்கள் எழுதினர்.அவர்களில் 78 ஆயிரத்து 693 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் 2023ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 536 மாணவர்கள் எழுதியுள்ளனர் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2022-23ஆம் கல்வி ஆண்டில் 12ஆயிரத்து 997 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 3,982 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் சேருவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக,

  • சேலம் மாவட்டத்தில் இருந்து 2007 மாணவர்கள் தேர்வு எழுதி 519 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 822 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 131 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் 597 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதி 92 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 481 மாணவர்கள் தேர்வினை எழுதி 237 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
  • தர்மபுரி மாவட்டத்தில் 548 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதிய நிலையில் 140 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 543 மாணவர்களில் நீட்டில் 209 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 321 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 22 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
  • சென்னை மாவட்டத்தில் 296 மாணவர்கள் தேர்வு எழுதி 64 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
  • தென்காசி மாவட்டத்தில் 335 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதியதில், 9 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு கடந்த 2017 -18ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பின்னர் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவர்கள் எழுதினர். 45 ஆயிரத்து 336 மாணவர்கள் தகுதி பெற்றனர். அதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 3,739 மாணவர்கள் நீட் எழுதி, 825 மாணவர்கள் தகுதி பெற்றனர். மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து, 2018- 19ஆம் ஆண்டில் நடைபெற்ற நீட்டில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 59 ஆயிரத்து 755 மாணவர்கள் தகுதி பெற்றனர். அரசுப் பள்ளியிலிருந்து 8,550 மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 1,151 மாணவர்கள் தகுதி பெற்றனர். ஆனால், மருத்துவப் படிப்பில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் 6 இடங்களில் மட்டுமே மாணவர்களுக்கு சேர்க்கை கிடைத்தது.

இதுபோன்ற சூழ்நிலையால் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்பில் வழங்கப்பட்டது.

இதனால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா யுனானி ஆயுர்வேதா ஹோமியோபதி ஆகிய படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில், 2019 -20ஆம் கல்வி ஆண்டில் படித்து நீட் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 99 ஆயிரத்து 610 மாணவர்கள் எழுதி 59,215 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களில் அரசுப் பள்ளிகளில் இருந்து எழுதிய 3,553 மாணவர்களில் 918 மாணவர்கள் தகுதி பெற்றனர். 336 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பிலும் 99 மாணவர்கள் பிடிஎஸ் படிப்பிலும் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தனர். இவர்களுக்கான மருத்துவக் கல்வி கட்டணங்களை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி 58 ஆயிரத்து 922 மாணவர்கள் தகுதி பெற்றனர். கரோனா தொற்று காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதில் பெரும் சிரமம் இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த ஆண்டு 8 ஆயிரத்து 61 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதி 1957 மாணவர்கள் தகுதி பெற்றனர். இதன் மூலம் 463 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பிலும் 104 மாணவர்கள் பிடிஎஸ் படிப்பிலும் சேர்ந்தனர்.

2021- 22ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 மாணவர்களில், 67 ஆயிரத்து 787 மாணவர்கள் தகுதி பெற்றனர். அவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 14 ஆயிரத்து 979 மாணவர்களில் நீட் தேர்வில் 4,118 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களில் 461 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பிலும் 106 மாணவர்கள் பிடிஎஸ் படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டுகளில் படித்த மாணவர்கள் மீண்டும் பயிற்சி மையங்களுக்குச் சென்று அதிக மதிப்பெண்களை பெற்று நடப்பாண்டுகளில் படித்து மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இடங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

2023ஆம் ஆண்டில், அரசுப் பள்ளி மாணவர்கள் 30ஆயிரத்து 536 பேர் எழுதியுள்ளனர் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனவே, கடந்த ஆண்டுகளில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தாண்டில் 17,000 பேர் கூடுதலாக தேர்வினை எழுதி உள்ளனர். இவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று தர வரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்றால் மருத்துவ படிப்பில் இடங்களை எடுத்துச் செல்வார்கள். இதன் மூலம் கடந்த ஆண்டில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இடங்களைப் பெறுவதும் சிரமமாகவே இருந்து வருகிறது.

அதிமுக ஆட்சியின்பொழுது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் எழுத ஆசிரியர்கள் மூலம் நேரடியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது. திமுக அரசு நீட் தேர்வினை எதிர்த்து , அதிலிருந்து விலக்கு பெறுவதில் ஆர்வம் காட்டியும் வருகிறது. இதனால் பள்ளிக் கல்வித் துறையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி வழங்குவதில் ஆர்வம் காட்டுவது குறைவாகவே இருந்து வருகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதால் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறினாலும், ஐஐடி, என்ஐடி, தேசிய சட்டப் பள்ளி போன்றவற்றில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வினை எழுத பயிற்சி அளிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பள்ளிக்கல்வித்துறை கடந்தாண்டு நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பதாக கூறினாலும் தீவிரமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வினை எழுதுவதற்கு தீவிரப் பயிற்சி அளிக்க வேண்டுமென கல்வியாளர்கள் கருதுகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களில் நடப்பாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி சிறப்பாக அளித்து கடந்தாண்டு மாணவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பயிற்சி மையங்களுக்குச் சென்று மருத்துவக்கல்வி படிப்பில் இடங்களைப் பெறலாம் என்ற மனநிலை மாறும்.

இதையும் படிங்க:சென்னையில் நிழற்கூடம் சரிந்து விபத்து; 4 பெண்கள் காயம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

Last Updated :Jun 17, 2023, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.