ETV Bharat / state

ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு வாதம்!

author img

By

Published : Jul 19, 2023, 8:43 PM IST

tn-government-has-no-authority-to-ban-online-rummy-central-government-argument
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு வாதம் !

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசுத்தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதமிட்டது.

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, மணிசங்கர், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். அப்போது அவர்கள், தமிழக அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது என்றும், மத்திய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

ஏராளமான கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கப்படுகிறது என்றும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை எனத் தெரிவித்தனர்.

நீதிபதி சந்துரு அரசுக்கு அறிக்கை அளிக்கும் முன் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கருத்துகளை கோரவில்லை எனவும், முறையான விசாரணை நடத்தாதது பாரபட்சமானது என்றும் குறிப்பிட்டனர்.
திறமை விளையாட்டான ரம்மியை ஆன்லைனில் தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு தகுதி இல்லை என்றும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தனி விதிமுறைகளையும், சுய கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதாக விளக்கமளித்தனர்.

ஆன்லைன் விளையாட்டுக்களில் மோசடிக்கு எதிராக போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதாகவும், உயர் நீதிமன்ற தீர்ப்புகளை செல்லாததாக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதாகவும் வாதிட்டனர்.
ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்த நீதிபதி சந்துரு குழு, இரு வாரங்களில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததாகவும், அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், மத்திய அரசின் சட்டப்படி, ஆன்லைன் விளையாட்டுகளின் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும், ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்து சட்டமியற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தமிழக அரசின் பதில் வாதத்திற்காக, விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டு, திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்குத் தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவன வழக்கறிஞர்கள் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காணாமல் போன 6 வயது சிறுவன் தண்ணீர் டேங்கில் சடலமாக மீட்பு.. 17 வயது சிறுவன் கைது.. தருமபுரியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.