அரசு மருத்துவர்கள் 17 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.20 போராட்டம்!

author img

By

Published : Oct 11, 2021, 7:59 PM IST

அரசு மருத்துவர்கள் போராட்டம்

அரசு மருத்துவர்களின் 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரையில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு அறிவித்துள்ளது.

சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு செயலாளர் டாக்டர் எஸ்.சையது தாஹிர் ஹூசைன் இன்று (அக்.11) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, " எங்களது 17 கோரிக்கைகளில் ஒரே ஒரு கோரிக்கை தான் நிதி சார்ந்த கோரிக்கை. போருக்கு சென்று உயிரிழக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். ஆனால் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை.

கரோனா தொற்று நாள் ஒன்றுக்கு 34 ஆயிரமாக இருந்த போது அரசு மருத்துவர்கள் தான் சிகிச்சை அளித்தனர். கரோனா தொற்றால் ஏழு அரசு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினர் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கார்ப்பஸ் ஃபண்ட் திட்டம்

அரசு மருத்துவர்கள் திடீரென்று உயிரிழக்கும் போது, அவர்கள் குடும்பத்தினருக்கு உதவ, மருத்துவர்களின் பங்களிப்பில் ‘கார்ப்பஸ் ஃபண்ட்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்கிறோம். புதிய அரசு பதவி ஏற்றும் மருத்துவர்களின் இது போன்ற சிறிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இழப்பீடு குறித்து கேட்டால் ஒன்றிய அரசு நிதி உதவி வழங்கி இருக்கிறது என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு அரசு தானே இழப்பீடு வழங்க வேண்டும்.

ஊதிய முரண்பாடு

ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு, மாநில அரசு மருத்துவர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

அரசு மருத்துவர்களின் 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் அக்.20 ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரையில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 10 ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு NPA எனப்படும் Non practicing allowance 20 விழுக்காடு வழங்குகிறது. இதுபோன்ற ஒரு சலுகையை எங்களுக்கு வழங்கினால் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யப் போவதில்லை.

அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மக்களின் பொது சுகாதாரத்திற்கான முதலீடு மட்டுமே தவிர செலவினம் இல்லை" என்று தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு தலைவர் டாக்டர்.எஸ்.பெருமாள் பிள்ளை உடனிருந்தார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.