ETV Bharat / state

ராமஜெயம் கொலை வழக்கில் மீண்டும் உண்மை கண்டறியும் சோதனை!

author img

By

Published : Jan 21, 2023, 7:04 AM IST

ராமஜெயம் கொலை வழக்கு - மீண்டும் இன்று உண்மை கண்டறியும் சோதனை!
ராமஜெயம் கொலை வழக்கு - மீண்டும் இன்று உண்மை கண்டறியும் சோதனை!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 4வது நாளாக இன்றும் (ஜன.21) சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.

திருச்சி: தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று திருவளர்ச்சோலை அருகே கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை திருச்சி மாவட்ட காவல் துறையினர் விசாரித்து வந்தனர். பின்னர் சிபிசிஐடி காவல் துறையினரின் வசம் வந்த இந்த வழக்கு, தொடர்ந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், வழக்கில் எவ்வித முன்னேற்றம் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே இந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடியின் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. மேலும் இதன் எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய இவ்வழக்கின் விசாரணையில், கொலை நடந்த காலகட்டத்தில் அந்த இடத்தைச் சுற்றியுள்ள செல்போன் டவர்களில் ஆக்டிவாக இருந்த சந்தேகத்துக்கிட்டமான செல்போன் எண்களைக் கொண்டு, 12 பேரை பட்டியலில் வைத்தனர்.

தொடர்ந்து அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சந்தேக பட்டியலில் உள்ள திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ், சத்யராஜ், செந்தில், கலைவாணன், திலீப், சுரேந்தர் ஆகியோரிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அறிவியல் கூடத்தில் கடந்த ஜன.18 மற்றும் 19 அன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து விசாரணையின் 3வது நாளான நேற்று (ஜன.20) திருச்சியைச் சேர்ந்த சாமி ரவி, சிவா, ராஜ்குமார் மற்றும் மாரிமுத்து ஆகிய 4 பேரிடம் காலை முதல் மாலை வரை விசாரணை நடைபெற்றது. அப்போது கொலை தொடர்பான கேள்விகள் மற்றும் பொது கேள்விகள் என மாற்றி மாற்றி கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் பதிலின்போது அவருடைய நாடித்துடிப்பு ஆகியவை வரைபடத்தில் குறிக்கப்பட்டு, அவை தடயவியல் நிபுணர்களால் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில், சிவா மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரிடமும், மேலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டி இருப்பதாக தடயவியல் அலுவலர்கள் தெரிவித்தனர். எனவே சிவா மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் இன்று (ஜன.21) காலை மீண்டும், உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதனைத்தொடர்ந்து சுமார் 10 நாட்களுக்குப் பின்னர், உண்மை கண்டறியும் சோதனை அறிக்கையானது, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் மற்றும் விசாரணை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனிடையே திருச்சி ராமஜெயம் கொலை தொடர்பாகத் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி காவல் துறையினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Love Today சினிமா பாணியில் செல்போன் பரிமாற்றம்: போக்சோவில் கைதான இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.