இந்தியா மற்றும் ஜெர்மன் நாட்டுக்கிடையேயான சட்டபூர்வமான பரஸ்பர ஒப்பந்தத்தில் சிக்கல்

author img

By

Published : Oct 13, 2022, 5:44 PM IST

சர்வதேச கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர்
சர்வதேச கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் ()

இந்திய பிரதமர் இன்னும் சில நாள்களில் ஜெர்மன் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்தியா மற்றும் ஜெர்மன் நாட்டுக்கிடையேயான சட்டபூர்வமான பரஸ்பர ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து தொன்மை வாய்ந்த சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனையில் ஈடுபட்டிருந்த சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை, இன்டர்போல் உதவியுடன் சிபிஐ ஜெர்மனியில் வைத்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூரை சிபிஐ கடந்த 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தது.

சுபாஷ் கபூர் மீது தமிழ்நாட்டில் மட்டும் சிலை கடத்தல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. ஐந்து வழக்குகளில், உடையார்பாளையம் சிலை கடத்தல் வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜெர்மனி குடிமகனான சுபாஷ் கபூரை இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஜெர்மனி அரசு கடந்த 2011ஆம் ஆண்டு ஒப்படைத்தது. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாகி வழக்கு விசாரணை முடிக்கப்படாததால் சுபாஷ் கபூரை திரும்ப அனுப்புமாறு தெரிவித்துள்ளது. ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கினால் தொடர்ந்து காலதாமதம் ஆவதால், ஜெர்மனி அரசு குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதற்கான சட்டபூர்வமான பரஸ்பர ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இதனால் இந்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வின்யா குவார்ட்டா இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தொடர்ந்து உடையார்பாளையம் கடத்தல் வழக்கு குறித்து விரைவாக விசாரணையை முடிக்குமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒருவேளை உடையார்பாளையம் கடத்தல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டாலும், ஏற்கனவே சுபாஷ் கபூர் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருப்பதால், அதனை கருத்தில் கொண்டு அவர் விடுதலை செய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படி விடுதலை செய்யும் பட்சத்தில் அவர் உடனடியாக ஜெர்மனிக்கு திரும்பி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர் சென்று விட்டால் மீதமுள்ள நான்கு வழக்குகளிலும் அவரை கைது செய்து விசாரணை நடத்துவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என சிலை கடத்தல் தடுப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை மீதமுள்ள நான்கு வழக்குகளில் கைது செய்து அவர் மீது விசாரணை நடத்துவதற்கு இந்திய அரசு மீண்டும் ஜெர்மனிக்கு கோரிக்கை வைக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனென்றால் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தை ஜெர்மனி அரசு ரத்து செய்திருப்பதால் இந்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சில நாள்களுக்குள் ஜெர்மனி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். எனவே அவரது சுற்றுப் பயணத்துக்கு முன்பாக இந்த பிரச்சினைகளை முடிக்கும் வேலைகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஒருவேளை பிரச்சினைகள் தீர்க்க முடியாவிட்டால் இந்திய பிரதமர் மோடி பயணத்தின் போது இது பின்னடைவாக பார்க்கப்படும் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க: 4-வது வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.