ETV Bharat / state

2030ஆம் ஆண்டில் காற்று மாசால் சூழப்போகிறதா சென்னை?.. CSTEP ஆய்வின் கணிப்பு என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 12:38 PM IST

சென்னையில் காற்று மாசின் அளவு 2030ல் 27 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வு கணிப்பு
சென்னையில் காற்று மாசின் அளவு 2030ல் 27 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வு கணிப்பு

Chennai Air Pollution: முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், 2030ஆம் ஆண்டில் சென்னையில் அதிகபட்சமாக 27 சதவீதம் மாசு வெளியேற்றம் அதிகரிக்கும் என CSTEP ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2030ஆம் ஆண்டில், சென்னையில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் 27 சதவீதம் அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்விற்கான மையம் (Center for Study of Science, Technology, and Policy (CSTEP)) பெங்களூரில் ஆகஸ்ட் 23 - 25ம் தேதி வரை நடத்திய மாசற்ற காற்றுக்கான இந்திய அளவிலான மாநாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2019-20ஆம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான விவரப்பட்டியலின் (Emissions Inventory) அடிப்படையில் ஆய்வு ஒன்றை CSTEP மேற்கொண்டது. இந்த ஆய்வில் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால், தூத்துக்குடியில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

மாசு வெளியேற்றம் தொடர்பான விவரப்பட்டியல் (Emissions Inventory) என்பது ஒரு ஆண்டு அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் காற்று மாசுபாடுகளின் அளவை, எங்கிருந்து வெளியேறுகிறது என்பதைச் சேர்த்து பட்டியலிடும் ஒரு தரவுத்தளம் ஆகும்.

இந்தியாவின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 76 நகரங்களுக்கான பட்டியலை CSTEP தயாரித்து உள்ளது. இந்த ஆய்வின்படி, சென்னையின் மாசு வெளியேற்றம் தூத்துக்குடியை விட
கிட்டத்தட்ட இரு மடங்காக இருக்கிறது.

மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் தற்போது உள்ளபடியே தொழிற் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், 2030ஆம் ஆண்டில், சென்னையில் அதிகபட்சமாக 27 சதவீதமும், திருச்சியில் 25 சதவீதமும், மதுரையில் 20 சதவீதமும், தூத்துக்குடியில் 16 சதவீதமும் மாசு வெளியேற்றம் அதிகரிக்கும் என்று CSTEP ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் காற்று மாசின் அளவு 2030ல் 27 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வு கணிப்பு
சென்னையில் காற்று மாசின் அளவு 2030ல் 27 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வு கணிப்பு

முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், 2030க்குள் மாசு வெளியேற்றத்தின் அளவை தற்போதுள்ள நிலையிலிருந்து திருச்சியில் 36 சதவீதமும், மதுரையில் 34 சதவீதமும், சென்னையில் 27 சதவீதமும், தூத்துக்குடியில் 20 சதவீதமும் குறைக்க முடியும் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, CSTEP மையத்தின் மூத்த ஆய்வாளர் ப்ரதிமா சிங் கூறுகையில், “எரிபொருள் பயன்பாட்டை நிலக்கரியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது, தரமான சாலை உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசைக் குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைக்கலாம்” எனக் கூறினார்.

சென்னையில் காற்று மாசின் அளவு 2030ல் 27 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வு கணிப்பு
சென்னையில் காற்று மாசின் அளவு 2030ல் 27 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வு கணிப்பு

மேலும், இது குறித்துப் பேசிய தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் எத்திராஜன் கூறும்போது, “சென்னை, மதுரை, திருச்சி, துாத்துக்குடி போன்ற நகரங்களில், காற்றின் தரத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக, தமிழ்நாட்டில் காற்று மாசு அதிகமாக இருக்கும் (Non-Attainment Area Program (NAAP) நகரங்களில் PM 10 காற்று மாசு நுண்துகள் அளவை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த இயக்கவியல் பற்றிய விரிவான புரிதலை நிறுவுவதும், மாசற்ற காற்றுக்கான பயனுள்ள உத்திகளை உருவாக்குவதும் எங்கள் குறிக்கோள்” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: விரைவில் 3000 மருத்துவப் பணியாளர்களுக்கு பணி ஆணை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.