ETV Bharat / state

வேலுமணி தாக்கல் செய்த வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிமன்றம்

author img

By

Published : Nov 8, 2022, 6:28 PM IST

முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் தள்ளிவைப்பு!
முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் தள்ளிவைப்பு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை: சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ் வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், பொத்தாம்பொதுவாக அல்லாமல், குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்கள் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு எனவும், முந்தைய அரசும், லஞ்ச ஒழிப்புத்துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்குச்சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து இந்த டெண்டர்கள் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.

அரசு அதிகாரிகளுக்கு வேலுமணியின் நண்பர் கே.சந்திரசேகர் உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், அதனடிப்படையில், சிறு ஒப்பந்ததாரர்களின் டெண்டர்கள் எவ்வித காரணமும் கூறாமல் ரத்து செய்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.

முறைகேடாக டெண்டர் ஒதுக்க துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும், அவ்வாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமல்லாமல், தற்போதைய மற்றும் எதிர்கால அரசுகளின் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதைத்தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிட்டார்.

மேலும், எஸ்.பி.வேலுமணி தரப்பில், தனக்கெதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. அறிக்கை அளித்ததாகவும், அதற்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பியதாகவும், அதை ஆராய்ந்த தமிழக அரசு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் தனக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவது என முடிவு எடுத்ததாக வாதிடப்பட்டது.

ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், டெண்டர் வழங்கியதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், டெண்டர் ஒதுக்கும் குழுவிலும் தான் இடம்பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில்கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் தன் மீது வழக்குப்பதிவு செய்து இந்நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக அப்போதைய எதிர்கட்சி மாநகராட்சி உறுப்பினர்கள் கூட எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், உள்நோக்கத்துடன் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'இளைஞர்களின் கனவை வீணாக்கும் திமுக... அரசாணை 115-ஐ உடனடியாக ரத்து செய்க'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.