எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தின் துரோகத்தை முதலமைச்சர் முறியடிக்க வேண்டும் - காட்டுப்பள்ளி மீனவர்கள் குமுறல்

author img

By

Published : May 14, 2022, 5:23 PM IST

எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தின் துரோகத்தை முதலமைச்சர் முறியடிக்க வேண்டும் - காட்டுப்பள்ளி மீனவர்கள் குமுறல்

எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தின் துரோகத்தை முதலமைச்சர் முறியடிக்க வேண்டும் என காட்டுப்பள்ளி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி குப்பத்தில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைப்பதற்காக தங்களது இடத்தை கொடுத்தது தொடர்பாக 140 மீனவக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளனர்.

அதில், ”2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனமும் இயற்றிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இங்கு மிகவும் கொடுமையான நம்பிக்கை துரோகம் நடந்து கொண்டிருக்கிறது. அதனைத் தமிழ்நாடு முதலமைச்சரால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்.

மேலும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு உதவுவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த மீனவர்களுக்கு தங்களின் அரசு துரோகம் செய்தது என்று வரலாற்றில் பதிவாக விட்டு விடாதீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

140 மீனவக் குடும்பங்களுக்கு ஏமாற்றம்: மேலும், இது குறித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சென்னை ஆதரவு குழுவைச் சேர்ந்த நித்தியானந்த் ஜெயராமன், சமூக ஆர்வலர்கள் டி.எம் கிருஷ்ணா, வழக்கறிஞர் ராம ப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பேசுகையில், "எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்திற்காக நாங்கள் 2009இல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம்.

இதன் காரணமாக நாங்கள் மீன்பிடித்து வந்த வளமான கடலும் வீடுகளும் எங்களுக்கு இல்லாமல் போயின. மேலும் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனமும் இயற்றிய ஒப்பந்தத்தின்படி 140 மீனவக் குடும்பங்களில் இருந்து தலா ஒருவருக்கு நிரந்தர வேலை அளிப்பது என்று உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கம்பெனிகள் தாங்கள் அளித்த உறுதிமொழிக்கு துரோகம் செய்து விட்டனர். மேலும் ஒப்பந்தத்தை மீறுவது மீனவர்களின் துயரத்தை அதிகப்படுத்துவதோடு, அரசின் தொழில்மயமாக்கல் கொள்கைக்கும் தடையாக மாறும் என்று பிரபலமான குடிமக்கள் 15 பேர் அரசை எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம்.

இழுபறியில் ஒப்பந்தம்: இந்த ’எல்&டி நிறுவனத்தின் கப்பல் கட்டுமானம் துறைமுகம்’ என்ற திட்டத்திற்கு அனுமதி அளித்து மீனவர்கள் வெளியேற வேண்டும் என்று அரசு நிர்பந்தித்த சமயத்தில், அதாவது 2009இல் தமிழ்நாடு அரசு மீனவ மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

மேலும் தற்போதைய அரசு நிர்வாகமும் கூட காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி மற்றும் அதானி துறைமுக நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. மீனவர்களுக்கு நிரந்தர வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அமலாக்கம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்படவில்லை.

கடந்த 13 ஆண்டுகளில் 2014 மற்றும் 2017 ல் அடுத்தடுத்து மூன்றாண்டு ஒப்பந்தங்கள் இரண்டை செய்து கொண்டுள்ள எல்.டி.எஸ்.பி (LTSB)ம், 2009 ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை தள்ளிப் போட்டு கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் ஒப்பந்தம் முடியும் காலத்தில் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சொல்லி வந்துள்ளது. ஆனால் கடைசி ஒப்பந்தமும் 2020 ல் யாருக்கும் நிரந்தர வேலை அளிக்காமலேயே முடிவுக்கு வந்தது.

மாவட்ட நிர்வாகம் பதில்: இப்போது 2009இல் பேசி முடிக்கப்பட்டதை அதற்கு கட்டுப்பட மாட்டோம் என்று எல்.டி.எஸ்.பி அறிவித்துவிட்டது. அதேநேரம் 2009இல் பேசி முடிக்கப்பட்டதை நடைமுறைப்படுத்துங்கள் என்று கட்டாயப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகமும் கம்பெனி நிர்வாகம் சொல்வதைப்போல செய்யுங்கள் என்று சொல்வது வருத்தம் அளிக்கிறது.

மறுகுடியமர்வு ஆளானவர்களுக்கு நிரந்தர வேலை அளிக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் உறுதிமொழியை அமலாக்குவதில் தோல்வி ஏற்பட்டதால் மறுகுடியமர்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டதில் இருக்க வேண்டிய ஊதியம் குறைந்து போனது.

மற்றொரு பக்கம் மீன்பிடித்து சம்பாதித்து வந்த மீனவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். துறைமுகத்தில் ஏற்படும் கடல் அரிப்பின் காரணமாக கடற்கரையின் பொது நிலங்கள் அழிக்கப்படுவதால் மீனவர்கள் இழப்புக்கு ஆளாக்கப்பட்டார்கள்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ‘இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்துவது குற்றமல்ல அது உரிமை’ - திருமுருகன் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.