ETV Bharat / state

அரியலூர் மாணவி தற்கொலை: உரிய நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு அறிவுறுத்தல்

author img

By

Published : Jan 21, 2022, 7:36 AM IST

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் டிஜிபி-க்கு கடிதம்..
தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் டிஜிபி-க்கு கடிதம்..

மாணவ, மாணவிகளை மதமாற்றம் செய்ய வற்புறுத்துவதுடன் அதை மறுப்பவர்களை உளவியல் ரீதியிலான சித்திரவதை அளித்து தற்கொலைக்குத் தூண்டும் தஞ்சாவூர் தனியார்ப் பள்ளி மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

சென்னை: 2007ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, குழந்தைகளுக்கான கல்வி உரிமையை நிலைநாட்டுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைக் கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரங்க் கனூங்கோ (Priyank Kanoongo) தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் டிஜிபி-க்கு கடிதம்..
தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் டிஜிபிக்கு கடிதம்

அந்தக் கடிதத்தில் தங்களிடம் ஜனவரி 20ஆம் தேதி வழங்கப்பட்ட புகார் ஒன்றில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கெல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி தங்களின் மாணவ, மாணவியரைச் சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்
தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்

மேலும், மதம் மாற மறுக்கும் மாணவ, மாணவிகளைப் பள்ளி நிர்வாகம் உளவியல் ரீதியிலான சித்ரவதைகளை அளித்து அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்
தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்

அது மட்டுமல்லாமல், அப்பள்ளியில் பயிலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி நிர்வாகத்தின் மதமாற்ற வற்புறுத்தலுக்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை வீட்டிற்கு அனுப்ப மறுத்து கழிவறையைச் சுத்தம் செய்யும்படியும், பாத்திரங்களைக் கழுவும்படியும் தண்டனை அளித்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் கடிதத்தில் பிரியங்க் கனூங்கோ தெரிவித்துள்ளார்.

பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள் பல அப்பள்ளி நிர்வாகம் மூலம் இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அந்த தனியார்ப் பள்ளி நிர்வாகம் மீது உரிய விசாரணை நடத்தி குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியரிடம் புகாரைப் பெற்று அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் கடிதத்தைப் பெற்ற ஏழு நாள்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல்செய்து ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தஞ்சையில் பள்ளி மாணவியை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்தத் தகவலும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவி மரணம் குறித்து தஞ்சை காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்

இதையும் படிங்க: பள்ளி மாணவி தற்கொலை - கட்டாய மதமாற்றம் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.