ETV Bharat / state

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பழச்சாறு அருந்தி முடித்துக் கொண்ட ஆசிரியர்கள்!

author img

By

Published : May 13, 2023, 8:29 PM IST

Etv Bharat
Etv Bharat

கடந்த ஐந்து நாட்களாக டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் பழச்சாறு அருந்தி தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு (TET) ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றோர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, திமுக தேர்தல் வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை 57 வயதாக உயர்த்த வேண்டும், அரசாணை 149-ல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டவர்கள் 5ஆவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பணி வழங்கப்படாதவர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ( மே 13 ) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில், “பணி வழங்குவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக சட்ட வல்லுநர்களுடனும், முதலமைச்சரிடமும் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் நேரில் வந்து பேச வேண்டும். வெளிநாட்டில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீடியோ கான்ஃபெரன்ஸ் வாயிலாகவாது பேச வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி போராட்டக்காரர்களுடன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கூறினார். அதற்கும் செவி சாய்க்காமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தவர்களை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு நேரிலேயே வந்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “முதலமைச்சர் உத்தரவுப்படி காலையிலேயே உங்கள் பிரதிநிதிகளை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். உங்களுடைய கோரிக்கையில் அதில் உள்ள நியாயங்கள் புரிகிறது. சீனியாரிட்டி படி பணியமர்த்துவதைப் பற்றி சட்ட வல்லுநர்களுடன் பேசி கருத்துகளைப் பெற வேண்டி உள்ளது.

அடுத்த வாரத்தில் இதற்கான நியாயமான தீர்வை முதலமைச்சர் கொடுப்பார் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். அதனால், நீங்கள் இந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி கையால் பழச்சாறு வாங்கி அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

தொடர்ந்து, “எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என நம்புகிறோம். குறிப்பாக ஒரு வார காலத்திற்குள் அதனை செய்து தருவதாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கக் கூடிய நிலையில் போராட்டத்தை கைவிடுகிறோம்; மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டால் தற்போது நடைபெற்ற போராட்டத்தை விட பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடம் மாற்றம் - தமிழக அரசு அரசாணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.