ETV Bharat / state

அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 9:12 PM IST

அகவிலைப்படி உயர்வுக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
அகவிலைப்படி உயர்வுக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

Tamil Nadu Govt DA Hike: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 42 சதவீத அகவிலைப்படியினை 46 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் தற்போது உயர்த்தி அளிக்கப்பட்ட அகவிலைப்படியினை கடந்த ஜூலை மாதத்திலிருந்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அகவிலைப்படி உயர்வை உயர்த்தி ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "மத்திய அரசு சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து ஆணை பிறப்பித்து இருந்தது. அதை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் போன்ற 16 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கரோனாவைக் காரணம் காட்டி அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு (EL - Earned leave) ஒப்படைப்பு போன்றவை நிறுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் 14 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.

பின்பு மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆறு மாதங்கள் பின்பு வழங்கப்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் காலத்தில் இருந்து மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை உயர்த்துகிறதோ அன்றைய தினமே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வந்தது.

மேலும் ஆறு மாதங்கள் காலதாமதமாக வழங்கப்படுகிறது என்ற கருத்தை முன்வைக்கும் போது, கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், இனி வருங்காலங்களில் நிதி நெருக்கடிகள் இருந்தாலும் மத்திய அரசு எந்த தேதியில் எத்தனை சதவீதம் அகவிலைப்படி உயர்த்துகிறதோ, அதே தேதியில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உயர்த்தப்படும் என்று கடந்த அகவிலைப்படி உயர்வின்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையாக வெளியிட்டிருந்தார்.

'சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்' என்பது போல கடந்த அகவிலைப்படி அரசாணையில் சொன்னதை இன்று செய்து காண்பித்து இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். மத்திய அரசு உயர்த்திய நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நான்கு சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ளது. மத்திய அரசு 1.7. 2023 முதல் முன்தேதி இட்டு அகவிலைப்படியினை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேபோலவே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முன் தேதி இட்டு 1.7.2023 முதல் வழங்கி உள்ளார்கள்.

இது மட்டுமின்றி நிலுவைத் தொகையுடன், அகவிலைப்படி உயர்வை பெற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்‌. மேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஒவ்வொரு கோரிக்கைகளையும் படிப்படியாக தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இதன் மூலம் மேலும் அதிகரித்துள்ளது. அகவிலைப்படி உயர்வை அறிவித்து 16 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கோடான கோடி நன்றியை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் எங்களின் பிரதான கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு போன்றவற்றை விரைவில் கிடைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டுமென இந்த நேரத்தில் வேண்டுகோளாக வைக்கிறோம்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு... முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.