ETV Bharat / state

ஜப்பான் நாட்டிற்கு 5 நாள் பயணம் செய்யும் தமிழ்நாடு மருத்துவக் குழு - அமைச்சர் மா.சு. விளக்கம்

author img

By

Published : Feb 5, 2023, 11:11 PM IST

ஜப்பான் நாட்டிற்கு 5 நாள் பயணம் செய்யும் தமிழ்நாடு மருத்துவ குழு- மா.சு. விளக்கம்
ஜப்பான் நாட்டிற்கு 5 நாள் பயணம் செய்யும் தமிழ்நாடு மருத்துவ குழு- மா.சு. விளக்கம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டவர்கள் ஜப்பான் நாட்டிற்கு 5 நாட்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஜப்பான் நாட்டிற்கு 5 நாள் பயணம் செய்யும் தமிழ்நாடு மருத்துவ குழு- மா.சு. விளக்கம்

சென்னை: இந்தப் பயணம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, ’உலகளவில் புற்றுநோய் மிகப்பெரிய தொற்றுநோயாக உருவெடுத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் ஆண்டுதோறும் 70,000 முதல் 80,000 வரை புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் முற்றிலுமாக புற்றுநோயை குணமாக்க முடியும். உலகளவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் ஜப்பான் முன்னோடியாக திகழ்கிறது.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையானது (JICA), ஜப்பான் நாட்டில் செயல்படுத்தப்படும் புற்றுநோய் கொள்கைகள், ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு தமிழ்நாடு மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் கீழ் ஒரு குழுவினை ஜப்பானுக்கு அனுப்ப கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், முதலமைச்சர் இந்த பரிந்துரையை ஏற்றுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை தலைமையாகக் கொண்டு, மருத்துவத்துறையின் அரசு முதன்மைச்செயலாளர், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர், புற்றுநோய்க்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் சரவணன், ஆறுமுகம், உதவிபேராசிரியர் பிரசன்னா அடங்கிய குழுவை ஜப்பான் நாட்டுக்கு அனுப்ப ஆணையிட்டு, ஜப்பான் நாட்டு புற்றுநோய் கொள்கை குறித்த செயல்பாடு, மருத்துவ கட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் அரசு மருத்துவர்களை ஜப்பான் நாட்டுக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றினை விரிவாக ஆராய்ந்து பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு வழங்க உத்தரவிட்டார்கள்.

முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 5 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்று அங்கு நாளை முதல் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை தலைமையகம் சென்று – உயர் அலுவர்களுடன் ஆய்வுக்கூட்டம், மருத்துவம் மற்றும் தொழிலாளர் நலஅமைச்சர் தலைமையிலான குழுவுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல், தேசிய அளவில் மாநிலம், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள புற்றுநோய் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பார்வையிடுவது என்கின்ற வகையில், ஜப்பான் தேசிய புற்றுநோய் மையம் – மருத்துவ கட்டமைப்பு பார்வையிடுதல், டோக்கியோ மாநகராட்சி மேயர் அவர்களை சந்தித்தல் மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை பார்வையிடுதல், ஹச்சியோஜி நகராட்சி – மருத்துவ கட்டமைப்பு பார்வையிடுதல்.

ஜப்பான் பயண நோக்கம்: ஜப்பான் நாட்டு தேசிய புற்றுநோய் கொள்கை – விவரங்கள் அறிதல், தேசிய மாநில மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் நிதி ஆதாரம், தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை மருத்துவ நிபுணர்களுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளுக்கான பயிற்சி வழங்குதல், ஜப்பான் நாட்டு புற்றுநோய் கொள்கை செயல்பாடுகளில் உள்ள சிறப்பம்சங்களை தமிழ்நாட்டில் உள்ள சிகிச்சை முறைகளில் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ந்து ஒரு செயல்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

மேலும், ஜப்பான் நாட்டின் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம் தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டம் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றிற்கு கடன் வழங்கி வருகிறது. மருத்துவத்துறையில் புதிதாக மருத்துவமனைகள் கட்டுவதால் புதிய மருத்துவ கழிவுகள் வாங்குவதற்கு ஜப்பான் பன்னாட்டு நிறுவனம் ரூ.1600 கோடிக்கு மேல் கடன் வழங்கி உள்ளது. இதன் நிலைமை குறித்தும் அங்கு எடுத்துக் கூற உள்ளோம்.

மேலும் இந்தியாவில் மதுரை உள்ளிட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் பொழுது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து கட்டுமான பணிகளுக்கான நிதி பெறுவதற்கு ஜப்பான் கூட்டு நிறுவனத்திற்கு திட்ட அறிக்கையை மத்திய அரசு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இளநிலை படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அதேபோல், ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும் பொழுது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஜப்பான் நாட்டிற்கு ஒன்றிய அரசின் சார்பில் வரும் பிரதிநிதியுடன் கலந்து ஆலோசித்து அங்கு நிதியினை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் மறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.