ETV Bharat / state

இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் புதிதாக 23,888 பேருக்கு கரோனா

author img

By

Published : Jan 18, 2022, 9:37 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 23 ஆயிரத்து 888 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகப் பாதிப்பு குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

கரோனா உறுதி
கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று(ஜன.17) கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 443ஆக இருந்தது.

இந்நிலையில், இன்று (ஜன.18) வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 888 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 550 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், தமிழ்நாட்டில் இருந்த 23 ஆயிரத்து 865 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 23 நபர்களுக்கும் என 23 ஆயிரத்து 888 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 266 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 29 லட்சத்து 87 ஆயிரத்து 254 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 171 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 15 ஆயிரத்து 36 பேர் இன்று ஒரே நாளில் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27லட்சத்து 89 ஆயிரத்து 45 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 13 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 16 நோயாளிகளும் என மேலும் 29 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் புதிதாக 8 ஆயிரத்து 305 நபர்களுக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 69ஆயிரத்து 691 என உயர்ந்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 143 நபர்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 228 நபர்களுக்குப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்றைய பாதிப்பு

கன்னியாகுமரி - 830

திருவள்ளூர் - 854

திருச்சி - 471

தஞ்சாவூர் - 453

திருநெல்வேலி - 707

சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் வைரஸ் தொற்றுப் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சராசரி பரிசோதனையில் பாதிப்பின் எண்ணிக்கை 16.7% எனப் பதிவாகி வந்தாலும் சென்னையில் 28.7 விழுக்காடு, செங்கல்பட்டில் 26.1 விழுக்காடு, திருவள்ளூரில் 22.2 விழுக்காடு , தேனியில் 21.8 விழுக்காடு எனத் தொற்று பரவல் வேகம் அதிகமாக உள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் படுக்கைகளும் அதிகளவில் நிரம்பி வருகின்றன.

அதேபோல் தனிமைப்படுத்தும் மையங்களும் படுக்கைகளும் நிரம்பத் தொடங்கியுள்ளன. மேலும் இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Andhra Pradhesh Night Curfew:ஆந்திரப் பிரதேசத்தில் அமலுக்கு வருகிறது இரவுநேர ஊரடங்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.