ETV Bharat / state

Sylendra babu IPS: ஓய்வு பெறுகிறார் டிஜிபி சைலேந்திரபாபு

author img

By

Published : Jun 29, 2023, 7:18 PM IST

Updated : Jun 29, 2023, 9:26 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு காவல் துறை டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு நாளையுடன்(30.06.2023) ஓய்வு பெறுகிறார்.

சென்னை: டிஜிபி சைலேந்திரபாபு பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை. இவர் 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. எம்எஸ்சி விவசாயம், எம்பிஏ, பிஎச்டி உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர். சைபர் கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்துள்ளார். 1962ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்த அவர், தனது 25வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எஸ்பியாக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மற்றும் சென்னை அடையாறு துணை ஆணையர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணிபுரிந்தார். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக இருந்தபோது அதில் முத்திரை பதித்தவர்.

மேலும் சென்னை காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றியபோது 2004ஆம் ஆண்டு கட்டப்பஞ்சாயத்து, ரவுடி மாமூலில் கொடி கட்டி பறந்த தாதாக்களான ‘காட்டான்’ சுப்பிரமணி, ‘கேட்’ ராஜேந்திரன், ‘பூங்காவனம்’ ராமமூர்த்தி, ‘மாட்டு’ சேகர், ‘டைசன்’ சேகர், ‘பாக்சர்’ வடிவேல் மற்றும் வீரமணி போன்ற ரவுடிகளின் கதைக்கு முடிவு கட்டினார்.

தற்போது சென்னையில் பெரிய ரவுடிகள் அந்த அளவுக்கு இல்லை என்றால், அதற்கு சைலேந்திரபாபுவின் ஆரம்பகால துணிச்சல் நடவடிக்கைகள்தான் காரணம் என காவல் துறையினரே கூறுகின்றனர். வடசென்னையில் 4 ஆண்டுகள் இணை ஆணையராக இருந்து முத்திரை பதித்தவர்.

2010ஆம் ஆண்டு நவம்பரில் கோவை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றிய போது, பள்ளிச் சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு சைலேந்திரபாபு வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றார்.

அதனையடுத்து, கடலோரப் பாதுகாப்பு குழுமக் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அவரைத் தேடி வந்தது. அங்கும் அவரது பணி பாராட்டுதலைப் பெற்றது. 2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கடல் போல சூழ்ந்து கொண்டது.

உடனடியாக களத்தில் இறங்கிய சைலேந்திரபாபு, கடலோர பாதுகாப்பு குழும நீச்சல் வீரர்களுடன் வெள்ளக் களத்தில் குதித்தார். வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு நீந்தியே சென்று வீட்டுக்குள் சிக்கிய பலரை மீட்டது இன்னும் பாராட்டைப் பெற்றது. 3 ஆண்டுகள் அவர் தலைமையில் செயல்பட்டதால் கடலோர பாதுகாப்பு குழுமம் இதுவரை பெறாத புதிய பலம் பெற்றது.

தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக கடலோர பாதுகாப்பு குழும நிலையங்கள் தொடங்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் மீனவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் கடலோர பாதுகாப்பு குழுமத்தை மேலும் பலப்படுத்தினார். அந்நிய நாட்டினர் தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் ஊடுருவ முடியாதபடி, தமிழ்நாட்டின் கடல் எல்லைகள் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட்டது.

கள்ளத்தோணியில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கைத் தமிழர்கள் நடுவழியில் கடலில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் சோக சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. கள்ளத்தோணி ஆசாமிகளை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சைலேந்திரபாபு, அவ்வாறு செல்பவர்களை அழைத்து விழிப்புணர்வு அளித்தார்.

இதனால் கள்ளத்தோணியில் ஆஸ்திரேலியாவிற்கு தற்போது செல்வது குறைந்துள்ளது. அதனையடுத்து, சைலேந்திரபாபு சிறைத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். சிறைக் கைதிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம், கைதிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

தண்டனை முடிந்து விடுதலை ஆகும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அந்த திட்டம் அமைந்தது. 14 ஆண்டுகள் சிறையில் கழிக்கும் கைதிகள் வெளியே சென்று வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று விழிக்காமல் டிரைவர் தொழில் செய்து, அவர்கள் தங்கள் வருமானத்தை தேடிக் கொள்ள இது ஏதுவாக அமைந்தது.

மேலும் நன்னடத்தையுடன் உள்ள கைதிகள் 700க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தார். பின்பு அவர் டிஜிபியாக பதவி உயர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, ரயில்வே காவல் துறை டிஜிபியாக பதவியில் இருந்தார்.

அதன் பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூனில் டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திரபாபு, தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, கஞ்சா வேட்டை, பிச்சைக்காரர்களை மீட்கும் ஆபரேஷன், மறுவாழ்வு, ரவுடிகளை ஒழிக்க மின்னல் ரவுடி வேட்டை, ஆபரேஷன் கந்துவட்டி, போலி மருத்துவர் கண்டறியும் நடவடிக்கை, காணாமல் போன குழந்தைகள் மீட்பு ஆபரேஷன் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இவரது பதவி காலத்தில் பிரபல கொள்ளையர் நீராவி முருகன் என்கவுண்டர் செய்யப்பட்டார். செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சிக்கு என இரு முறை பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தபோது சிறப்பாக பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டதாக அனைவராலும் பாராட்டு கிடைக்கப் பெற்றது.

மேலும், தென்னிந்தியாவில் முதல் முறையாக குடியரசுத் தலைவரின் சிறப்பு தனிக்கொடி தமிழ்நாடு காவல் துறைக்கு அப்போதைய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவால் வழங்கப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி கலவரம், கோவை குண்டு வெடிப்பு, பிஎப்ஐ அமைப்பு என்ஐஏ சோதனை, வடமாநிலத் தொழிலாளர் பிரச்னை, அதிமுக கலவரம், கள்ளச்சாராய மரணம், நிதி நிறுவன மோசடி போன்ற சம்பவங்களும் இவரது பதவி காலத்தில் அரங்கேறியது.

36 ஆண்டு கால காவல் துறை அனுபவத்தில் சைலேந்திரபாபு பல அரிய சாதனைகளை நிகழ்த்திய அவரது கடமை உணர்வை பாராட்டி குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்காக பாரதப் பிரதமரின் பதக்கம், சந்தன கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையில் பணியாற்றி வீரதீர செயல்கள் ஆற்றியதற்காக முதல்வர் பதக்கமும் பெற்றுள்ளார்.

மேலும் ‘YOU TOO BECOME AN IPS OFFICER’, ‘BE AMBITIOUS’, ‘PRINCIPLES OF SUCCESS IN INTERVIEW’, ‘A GUIDE OF HEALTH AND HAPPINESS’, ‘அமெரிக்காவில் 24 நாட்கள்’ ஆகியவை இவர் எழுதிய நூல்கள். இந்த நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு வருகிற 30ஆம் தேதி உடன் ஓய்வு பெறுகிறார். மேலும், தற்போது அவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிடமாற்றம்!

Last Updated :Jun 29, 2023, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.