ETV Bharat / state

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 7:20 PM IST

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Tamil Nadu weather update: தமிழகத்தில் நாளை (நவ.29) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.28) காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30ஆம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினால் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடிமின்னல் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்: இன்று திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை (நவ.29) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழையானது பதிவாகி உள்ளது. இதேபோல், புதுவை காரைக்கால் பகுதிகளில், மிக லேசான மழையானது பதிவாகி உள்ளன. மேலும், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி பகுதியில் 9 செ.மீ மழையானது பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: நாளை தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 29ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி மீட்பு - 21 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.