ETV Bharat / state

தீபாவளியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

author img

By

Published : Oct 24, 2022, 11:30 AM IST

தீபாவளி பண்டிகை முன்னிட்டு முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: இல்லங்கள் தோறும் தீப ஒளி ஏற்றி, இருள் அகற்றி தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நாகாகரன் எனும் அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள். சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது. தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து. தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

தன்னலமும், அகம்பாவமும், அரக்க குணமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரை தர்மம் தண்டித்து, நியாயத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகைதானே தீபாவளி! தமிழ் நாட்டு மக்கள், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி நடைபெறும் வண்ணம் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும் தீப ஒளித் திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரும் வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும்.

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்: பலவிதமான பண்டிகைகளை நாம் கொண்டாடினாலும், தீபாவளிக்கு இருக்கிற உற்சாகம் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. புத்தாடை, இனிப்பு, பட்டாசு என தீபாவளியின் ஒவ்வொரு அம்சமும் கொண்டாட்டமானது. அதேப்போலவே, மனித சமூகத்திற்கு, 'அதர்மம் நிலைக்காது; தர்மம் வெல்லும்' என்ற நீதியை சொல்லும் நாளாக தீபாவளி அமைந்திருக்கிறது.

தீமைகள் எல்லாம் விலகி நன்மைகள் பெரும் வெளிச்சமாக பரவட்டும், ஒவ்வொருவரிடமும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்கட்டும். உள்ளும் புறமும் உயர்ந்த சிந்தனைகளோடு இருளை அகற்றி, அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி திருநாள் வழிகாட்டட்டும்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்: அனைவருக்கும் உளம் கனிந்த மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் ஒளிபரவி மகிழ்ச்சி பரவட்டும்.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்: அதர்மங்கள் அழிந்து தர்மங்கள் தழைத்திட இருள் அகன்று வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் தீபாவளியாக இந்த வருடமும் அமைய வேண்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இதையும் படிங்க: ஹேப்பி தீபாவளி.. ஸ்டைலான பிளையிங் கிஸ்.. ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.