ETV Bharat / state

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 2,582-ஆக அதிகரிப்பு.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 5:40 PM IST

Increase in graduate teaching posts
பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2,582 என அதிகரிப்பு.. இன்ப அதிர்ச்சி வழங்கிய ஆசிரியர் தேர்வு வாரியம்..

TRB exam Update: பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 என அதிகரித்து ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிறதுறை பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு 2024 ஜனவரி 7ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து, நவம்பர் 1 முதல் 30 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் 86 பணியிடம், பள்ளிக்கல்வித்துறையில் 52 பணியிடம், ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 144 பணியிடம், தொடக்கக் கல்வித்துறையில் 78 பணியிடம் என மேலும் 360 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இன்று (நவ 15) கூடுதல் அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அரசாணையில், "ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் 2 பட்டதாரி பணிக்கு 2012 ம் ஆண்டில் தகுதி பெற்றிருந்தால், 2023 ம் ஆண்டு வரையில் 11 ஆண்டுகள் என்பதால், அவர்களுக்கு 5.5 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் 2 பட்டதாரி பணிக்கு 2013 ம் ஆண்டில் தகுதி பெற்றிருந்தால், 2023 ம் ஆண்டு வரையில் 10ஆண்டுகள் என்பதால், அவர்களுக்கு 5 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.

2014ல் தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4.5 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2017ல் தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2019ல் தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2022 ல் தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 0.5 மதிப்பெண்களும், 2023ல் தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்கப்படும்.

மேலும், பகுதி 1 ல் தமிழ் பாடத்தில் 30 கேள்விகளுடன் 30 நிமிட தேர்வாக இருக்கும். இந்த தேர்வில், 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுபவர்களின், முதன்மை தேர்வு விடைத்தாள் மட்டுமே திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பகுதி 2 மூன்று மணிநேர தேர்வாக நடைபெறும். இதில் 150 கேள்விகள் இடம்பெறும். பொதுப் பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும், இதர பிரிவினருக்கு 45 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்களாக இருக்கும்.

ஆசிரியர் பணி போட்டித் தேர்வு எழுதுவதற்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 30 ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தாள்-2ல் தேர்ச்சி பெற்றவர்கள், www.trb.tn.gov.in/www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் https://trb1.ucanapply.com/apply_now என்ற இணைப்பில் விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் கேட்கும் சான்றிதழ்களைத் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆசிரியர் பணி நியமன போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது அவர்களின் செல்போனில் மற்றும் இமெயில் ஐடி சரியாக இருக்க வேண்டும். அதன் மூலமே தகவல்கள் அனுப்பப்படும்.

தமிழ் வழியில் கற்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ள நிலையில், அதற்கான சான்றிதழையும் இணைக்க வேண்டும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி மற்றும் அதற்கு இணையான படிப்புகள் குறித்த விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தேவையான சான்றிதழ்கள், இறுதியாகப் படித்த கல்வி நிறுவனத்தின் தடையில்லா சான்று, அரசு அதிகாரியின் கையெழுத்துடன் நகல்கள் இடம்பெறவேண்டும்.

மேலும், தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு, 1800 425 6753 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை (Toll Free) காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். trbgrievances@tn.gov.in என்ற முகவரியிலும் குறைகளைத் தெரிவித்துத் தீர்வு காணலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: IND Vs NZ: கோலி - கில் கூட்டணியில் இந்தியா அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.