ETV Bharat / state

6 - 12 மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு.. வரவேற்க தயார் நிலையில் வகுப்பறைகள்!

author img

By

Published : Jun 11, 2023, 1:19 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறந்து செயல்பட உள்ளதால், பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப்புத்தம், நாேட்டுப் புத்தகம் தயார் நிலையில் உள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2022-23 ம் கல்வியாண்டிற்கான கோடை விடுமுறை ஏப்ரல் மாதம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும், ஜூன் 5-ஆம் தேதி முதல் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தாண்டு வழக்கத்தை விட கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2023-24 -ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு மாற்றி அறிவித்தது. கோடை காலத்தில் வழக்கமாக வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்ததால், பள்ளிகள் திறப்புத் தேதியை மீண்டும் மாற்றி பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

அதன்படி ஜூன் 12-ஆம் தேதி 6 முதல் 12-ஆம் வகுப்பிற்கும், ஜூன் 14-ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்க தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் தூய்மை பணிகள் மற்றும் பள்ளி வளாகத்தில் மின்சாரம் பழுது பார்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை பள்ளி தொடங்கும் முதல் நாளே மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டுப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தயாராக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீருடை அணிந்து வரும் மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் சமையல் அறைகளும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

பள்ளிகள் திறப்பு இந்த ஆண்டு சற்று காலதாமதமாக தொடங்குவதால் அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி அறிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கும் போதே மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு, காலியாக இருந்தால், அந்த இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் அரசின் விதிகளுக்கு உட்பட்டு தகுதியானவர்களை நியமிக்கவும் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நடப்பு கல்வி ஆண்டை பொறுத்தவரை 210 வேலை நாட்கள் நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற 1,425 பேருக்கு பணி ஆணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.