ETV Bharat / state

சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தது - ஆளுநர் ரவி புகழாரம்!

author img

By

Published : May 22, 2023, 9:44 AM IST

Tamil Nadu Governor Ravi speaking at the think to dare event and said Tamil Nadu was at the forefront of the freedom struggle
சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாடுதான் முன்னணியில் இருந்தது - ஆளுநர் ரவி புகழாரம்!

ஆளுநர் மாளிகையில் நடந்த எண்ணித் துணிக நிகழ்வில் பேசிய தமிழக ஆளுநர் ரவி, தேச பாதுகாப்பில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும், சுதந்திர போராட்டத்தில் தமிழகம் முன்னணியில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் மே 21 அன்று படை வீரர்கள், வீர மங்கைகள், பதக்கங்கள் பெற்ற ராணுவ வீரர்களுடன் ஆளுநர் கலந்துரையாடும் ‘எண்ணித் துணிக’ நிகழ்வு நடைபெற்றது. அதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி., “நமது படைவீரர்களையும், வீர மங்கைகளையும் (கணவர், பிள்ளைகளை இழந்த வீரப்பெண்கள்) போற்றுவதன் மூலம் நமது ஆளுநர் மாளிகை ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. உங்களை கௌரவிப்பதில் பாக்கியசாலியாக உணர்கிறோம்.

ஒரு வலிமையான ராணுவம் என்பது தேசத்தின் பெருமை மட்டுமல்ல, அது ஒரு பாதுகாவலனாக மட்டுமின்றி தேசத்தின் பெருமை மற்றும் கெளரவத்தின் காவலனாகவும் இருக்கிறது. ஒரு சிப்பாய் ஆயுதப் படையில் சேரும் போது - அது அவருக்கு 'வெறும் வேலை' இல்லை. தேசத்திற்கு தன்னை அர்ப்பணிப்பதோடு, நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக உள்ள அர்ப்பணிப்பாகும். அவரது உறுதிப்பாட்டை வெறும் வேலையாக நாம் பார்க்கக்கூடாது.

மோதல்கள், போர் ஏற்படும் போது, ​​ஒட்டுமொத்த தேசமும் ராணுவத்தின் பின்னால் எழுந்து நிற்கிறது, ஆனால் சாதாரண அமைதியான காலத்தில் ஒரு சிப்பாய் தனது வாழ்நாள் முழுவதும் ஆற்றிய சேவையை நாம் பாராட்டுவதில்லை. ராணுவ வீரர்கள் பற்றி நாம் பேசும்போது ஒரு சிப்பாய் என்பவர் ஒழுக்கத்துடனும்‘தேச பக்தி’யில் உறுதியானவருமாக இருப்பார் என பேசுகிறோம். ஆனால், நம் நாட்டில், 'தேச பக்தி' மற்றும் 'தெய்வ பக்தி' எப்போதும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ராணுவத்தில் சேர்ந்த சிப்பாய் ஓய்வு பெற்று விட்டாலும் அவரது தேசப்பணி மற்றும் சிப்பாயின் கடமை முடிந்து விட்டதாக நாம் கருதக் கூடாது.

ராணுவத்தில் பணிபுரிந்த வீரர் ஓய்வு பெற்றால், சமூகம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கா நிலை உள்ளது. ஆனால், தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதற்காக அந்த முன்னாள் சிப்பாய் தமது தேசப்பற்று உறுதிப்பாட்டை கைவிடுவதில்லை. ஒரு சிப்பாய் ஓய்வு பெற்ற பிறகு முரட்டுத்தனமாக அல்லது ஒழுங்கற்றவராக மாறுவது மிகவும் அரிதாக நடக்கும் செயல், நான் அறிந்த சூழலில், இதுநாள் வரை அப்படிப்பட்ட நிகழ்வை கேள்விப்பட்டதில்லை. தாம் சரியாக கவனிக்கப்பட்டாலோ கவனிக்கப்படாவிட்டாலோ கூட அந்த சிப்பாய் ஒரு வீரனாகவே இருப்பார். அதற்காக அவர் எல்லை முன்னரங்கில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

நான் தமிழ்நாடு ஆளுநராக வந்த பிறகு எந்த இடத்துக்கோ, மாவட்ட தலைநகருக்கோ சென்றால் அங்கே முன்னாள் ராணுவ வீரர்களை சந்திக்கும்போது அதை பெருமையாக கருதுவேன். அவர்களை சந்திக்க முன்னுரிமை கொடுப்பேன். அவர்களை சந்தித்துப் பேசி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்பது மட்டுமின்றி அவர்களை சந்திப்பதன் மூலம் ஆளும் நிர்வாகத்துக்கும் ஒரு செய்தியை நான் வழங்குகிறேன்.

அதேபோல, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்திக்கும் போது, ​​அவர்களுக்கு உரிய மரியாதை மற்றவர்களும் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை நான் உணர்த்துகிறேன். “முன்னாள் படையினர் நம்முடன் இருக்கிறார்கள் என்ற விழிப்பை பெற வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும்” என்பதை உணர்த்துகிறேன்.

தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த நமது ராணுவ வீரர்கள் விஷயத்தில் நான் ஒரு யோசனையை முன்பு குறிப்பிட்டிருந்தேன். அதை தொடர்ச்சியாகவும் கூறி வருகிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் எந்தெந்தப் பள்ளி அமைந்திருக்கிறதோ, அவற்றில் அந்த பகுதி அல்லது மாவட்ட வரம்பில் உயிரிழந்த ராணுவ வீரரின் படத்தை மாட்டி பெருமைப்படுத்துங்கள். அந்த வீரரின் உயிர்த்தியாக நாளில் அவருக்காக ஒரு சிறிய விழாவை ஏற்பாடு செய்யலாம்.

இதன் மூலம் அவர் பிறந்த ஊரும் கிராமமும் மாவட்டமும் பெருமைப்படும். மாணவர்கள், அவர்களின் படங்களைப் பார்த்து, இவர் எனது கிராமத்தைச் சேர்ந்தவர் என மார்தட்டி, அவரது வீரம் நிறைந்த தியாகத்தை நினைத்து பெருமைப்படுவர். இறந்த ஆன்மாவுக்கு நமது நன்றியை வெளிப்படுத்த இதுவும் ஒரு வழியாகும். இதற்கு பெரிய செலவு ஒன்றும் ஆகாது. இந்த யோசனைக்கு எதிர்ப்பு வரும் என்று நான் நினைக்கவில்லை. தேசப் பணியில் ஒரு வீரர் தனது உயிரை தியாகம் செய்யும்போது இன்னுயிரை வழங்க அவர் தகுதியானவர் என்று அடையாளப்படுத்தி அவரை காலத்தால் அழியாதவராக நாம் மாற்ற வேண்டும்.

இன்றைய நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட சில பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன். இந்திய அரசின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனத்துக்கு அதை கொண்டு சென்று தீர்வு காண்பேன். தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சம் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கைகள் உள்ளனர். இது சிறிய எண்ணிக்கையல்ல.

தமிழ்நாட்டை தேசியவாதம் குறைவாக உள்ள இடமாக எங்கோ சிலர் கூறுகிறார்கள். அப்படி பேசியவர்கள் பற்றி நான் வியக்கிறேன். அவர்களின் கூற்று உண்மைக்கு வெகு தூரத்தில் உள்ளது. தேசப் பாதுகாப்பில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் தான் உள்ளது. நமது தேசிய சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாடுதான் முன்னணியில் இருந்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள், நம் தேச விடுதலைக்காகப் போராடிய இடத்தை இங்கே நாம் காண்கிறோம். பொதுவெளியில் அதிகம் அறியப்படாத அந்த நிஜ நாயகர்களில் பாடப்படாத 100 நாயகர்களை முதல் நடவடிக்கையாக நாங்கள் முன்னிலைப்படுத்தத் தொடங்கியுள்ளோம். வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலு நாச்சியார் போன்ற பெரும் சுதந்திர நாயகர்கள் அந்த காலத்தில் வாழ்ந்து இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

இவர்களை போல தியாகம் செய்த பலர் இன்னும் நமக்குத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய அறியப்படாத மற்றும் பாடப்படாத நாயகர்களை நமது பல்கலைக்கழகங்களின் இளம் மற்றும் ஆர்வமுள்ள ஆராய்ச்சி அறிஞர்கள் அடையாளம் அடையாளம் கண்டு வருகின்றனர். இந்தப் பணியை நமது ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்கள். பாடப்படாத நாயகர்கள் பட்டியல் பல ஆயிரம் பேரைக் கடந்து செல்வதால் நமது ஆராய்ச்சியாளர்களின் முன்முயற்சி தொடரும்.

தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்திற்கான பாதைக்கும் உந்து சக்தியாக விளங்கியது என்பது வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது மாநிலம் தான் அதிக எண்ணிக்கையிலான சுதந்திர போராட்ட வீரர்களை தேசத்துக்கு வழங்கிய மாநிலம். சுதந்திரத்திற்காக முப்பதாயிரம் இன்னுயிரை ஒரு மாநிலம் கொடுத்திருப்பது போல இந்தியாவில் எந்தவொரு மாவட்டமோ, மாநிலமோ செய்திராத தியாகம் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுக்கு எதிராக பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்... ஏன் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.