ETV Bharat / state

தொழில் உற்பத்திக்கான கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது - குடியரசு துணைத் தலைவர் பேச்சு

author img

By

Published : Apr 25, 2022, 10:58 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பொருளாதார சிறப்பு மண்டலங்களில் சிறப்பாக செயல்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் விருதுகளை வழங்கி, தொழில் துறை உற்பத்திக்கான கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என புகழாரம் சூட்டியுள்ளார்.

தொழில் துறை உற்பத்திக்கான கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது-குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு
தொழில் துறை உற்பத்திக்கான கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது-குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை: தாம்பரம் மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2019-2020ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள பொருளாதார சிறப்பு மண்டலங்களில் சிறப்பாக செயல்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.


நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசுகையில், “10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகவும் பிரபலமான பழம்பெரும் தமிழ் கவிஞரான ஔவையார், ’கொன்றை வேந்தன்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் அவர் ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று எழுதியுள்ளார். அதன் பொருள் கடல் கடந்து சென்றாவது செல்வத்தைச் சேருங்கள் என்பதுதான்.


இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்து நேரங்களுக்கும் பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று பல்வேறு நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளை வைத்துள்ளோம். முக்கியத்துவம் வாய்ந்த அந்நியச் செலாவணியைப் பெறுவதிலும், நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது.


அண்மையில் நிறைவடைந்த 2021-22-ம் நிதியாண்டில், இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி இதுவரை இல்லாத சாதனை அளவாக 418 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நடைபெற்றுள்ளது. சேவைகள் ஏற்றுமதி 250 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இரண்டும் இணைந்து 650 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருந்தது. கரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் இது குறிப்பிடத்தகுந்த சாதனையாகும்.

வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு ஏற்ற கொள்கைகள், எளிதாக தொழில் செய்வது மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு மதிப்பு அளிக்க கவனம் செலுத்துவது ஆகியவற்றின் மூலம் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கச்செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் ஏற்றுமதி தொகுப்பில் 28% அளவுக்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கினை ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட தொழில்நிறுவனங்களுடன் இணைந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு துறைகளிலும் 5,604 பிரிவுகளுடன் நாடு முழுவதும் 268 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை நிறைவேற்றுவதில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் முக்கியப் பங்களித்தன.

தொழில் துறை உற்பத்திக்கான கட்டமைப்பை சிறந்த அளவில் பெற்றுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, தோல் பொருட்கள், இலகு மற்றும் கனரக பொறியியல், பம்ப்-கள் மற்றும் மோட்டார்கள், மின்னணு மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியில் மிகப்பெரும் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், தோல் பொருட்கள், மென்பொருள் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் நாட்டுக்கே முன்னோடியாக தமிழ்நாடு தொடர்ந்து வருகிறது. வலுவான கட்டமைப்பு மற்றும் 4 சர்வதேச விமான நிலையங்கள், மூன்று மிகப்பெரும் கடல் துறைமுகங்கள், பல்வேறு சிறு கடல் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் கூடிய சிறந்த போக்குவரத்து வசதிகளுடன் நாட்டில் மூன்றாவது பெரும் ஏற்றுமதி மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

சென்னை- பெங்களூரு தொழில்வழித் தடம், சென்னை – கன்னியாகுமரி தொழில்வழித் தடம் ஆகியவை நிறைவடையும்போது, மாநிலத்தின் பொருளாதாரத்திறனில் மேலும் மாற்றம் ஏற்பட்டு, ஏற்றுமதிக்கான மிகப்பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்னைகளான துறைமுகங்களில் போதிய அளவில் கன்டெய்னர்கள் இல்லாதது, துறைமுகங்களைப் பயன்படுத்துவதில் நெருக்கடி, குறைவான அளவிலான சேமிப்புக்கிடங்கு மற்றும் குளிர்சாதன சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட சவால்களை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் தீர்த்துவைக்க வேண்டும்.

வர்த்தகர்களும் வர்த்தக குறியீடுகள், காப்புரிமைகள், சான்றிதழ், தரக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏற்றுமதி சந்தையில் தாவரங்களை அனுப்பும்போது அதற்கான சுகாதார கட்டுப்பாடுகளை பேணுவது ஆகியவற்றில் சரியான முறையில் செயல்பட வேண்டும்” எனப் பேசினார்.

தொழில் துறை உற்பத்திக்கான கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது-குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

இந்நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அனுப்ரியா சிங் படேல் மெப்ஸ், வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் சண்முக சுந்தரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.