ETV Bharat / state

‘இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக அஞ்சுகிறது' - கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 10:59 PM IST

tamil nadu congress leader ks alagiri has criticized bjp is afraid of india alliance
கே.எஸ்.அழகிரி விமர்சனம்

BJP Is Afraid For I.N.D.I.A Alliance: மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, “எதற்கும் அஞ்ச மாட்டோம் எனக் கூறிய நபர்கள் இன்று இந்தியாவின் பெயரை மாற்றம் செய்ய நினைக்கின்றனர்” என விமர்சித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விஸ்வகர்மா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆர். ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமா? ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு போராட்டமா? என்ற சூழல் ஏற்பட்டுள்ளது, ராஜாஜி கொண்டு வந்த குலகல்வி போன்ற ஒரு திட்டம் என அனைவரும் கூறினார்கள், ஒரு வழியில் அது உண்மை ஆனால் ராஜாஜி நேர்மையானவர், ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறியதும் ராஜினாமா செய்தார். ஆனால் மோடி பேசவும் மாட்டார், ராஜினாமாவும் செய்யமாட்டார். பெற்றோர்களுக்குக் குழந்தைகளுக்கு வார விடுமுறை நாட்களில் உதவி செய்ய வேண்டும் என ஓராண்டுக்கு முன்பு பேசினார். இதில் உள் நோக்கம் இருக்கிறது எனக் கூறினால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள், மக்கள் மத்தியில் உள்நோக்கத்தோடு செயல்படும் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நீ கல்லூரிக்குப் போக வேண்டாம் எனக் கூறும் ஒரு திட்டம் இது அதை நோக்கி நகர்ந்துகொண்டு உள்ளனர். பெரிய ஆபத்துகளை நாம் சந்திக்க உள்ளோம். உதயநிதி பேசிய உரை டெல்லியை உலுக்கிக்கொண்டு உள்ளது. உதயநிதி மீது வழக்குகளை நீங்கள் போடுங்கள் லட்சக்கணக்கான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். காரணம் அவர் கூறிய அனைத்து கருத்துகளையும் நாங்கள் அப்படியே ஆதரிக்கிறோம். 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இந்தியா என பெயர் மாற்றம் செய்வதை எதிர்த்தவர்கள் இன்று மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து ஆ.ராசா பேசுகையில், “சனதானமும் விஸ்வகர்மா திட்டமும் வெவ்வேறு இல்லை. உதயநிதி மென்மையாகதான் சொன்னார்; மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று மலேரியா, டெங்கு ஆகிய நோய்களுக்கு SOCIAL STIGMA இல்லை அதை அருவருப்பாக மக்கள் பார்க்க மாட்டார்கள், சனாதனத்தை பொறுத்தவரை தொழுநோய், HIV போல அவலமான ஒரு நோய். மோடி சனாதானத்தை கடை பிடியுங்கள் என கூறுகிறார், அவரே அதை கடைபிடிக்கவில்லை.

காரணம் ஒரு நல்ல இந்து கடல் கடந்து பயணம் செய்ய கூடாது, இவர்கள் வெளிநாட்டிற்கு மட்டுமே பயணம் செய்வார். யாரை வேண்டும் என்றாலும் கூட்டி வாருங்கள் சனாதானம் குறித்து பேச நான் தயாராக இருக்கிறேன். டெல்லியில் லட்சம் நபர்களை கூட கூட்டத்தை கூட்டுங்கள். என்னை பொறுத்தவரை உதயநிதி மென்மையாக பேசி உள்ளார், என்னை பொறுத்தவரை நான் அதிகமாக பேசுவேன்” என்றார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், “சனாதனம் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இது மகிழ்சியை அளிக்கிறது, திறந்த வெளியில் இந்த விவாதம் இதுவரை நடைபெறவில்லை. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து இருப்பவர்கள் சன்பரிவார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் மிக பொறுப்புணர்வோடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருவதால் இந்த சூழல் கணிந்துள்ளது எனவே அவர்களுக்கு ஆத்திரம் திமுக மீது, திமுகவை விமர்சிப்பதை ஒரு வேலையாக பாஜகவினர் செய்து வருகின்றனர்.

திமுகவை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சித்தரிப்பது மூலம் இந்துக்களை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்கிறார்கள். இது இந்துக்களை ஏமாற்றும் முயற்சி, 100 விழுக்காடு வாக்கு வங்கி அரசியலுக்கான வேலை திட்டம் தற்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மக்கள் இந்து மக்கள்தான் வேறு யாரும் இல்லை. சனாதனம் தர்மம் வாழ்வியல் முறை என இட்டுக்கட்டி விளக்கம் தருகிறார்கள், இப்படி எங்கும் விளக்கம் இல்லை. சனாதனம் தர்மத்தில் சமத்துவம் இல்லை என எழுத்துக்கள் மூலம் இருக்கிறதா என கேட்கின்றனர்.

அப்படி கேட்டால் காட்ட முடியாது, காரணம் அது வெவ்வேறு முறைகளில் மக்கள் மனதில் உள்ளது. சனதான தர்மத்திற்கு எப்போது தொடங்கியது என கேட்டாள் யாராலும் கூற முடியாது, நான்கு வர்மம் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது. பார்ப்பனர்களுக்காக உருவாக்கப்பட்டது என அம்பேத்கர் கூறுகிறார். பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் இல்லை என கூறுவதே சனாதானம் தர்மம். இந்த அடிப்படையை உயிர் பொருளாக ஏற்றுக்கொண்டது நான்கு வர்மம். சனாதன தர்மத்தை பாதுகாத்து நிற்பது OBC சமூகம்தான் எனவே இதை OBC சமூக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ராஜாஜி கொண்டு வந்தது குலகல்வி இது மேம்படுத்துதல் இதற்காக கடன் தருகிறோம் என கூறுகிறார்கள். இந்து ராஷ்டிரம் என அழைக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம் இன்று ‘பாரத்’ என பெயர் மாற்றினாலும் இந்து ராஷ்டிரம் என பெயர் மாற்றம் செய்ய மீண்டும் வெற்றி பெற்றால் நடவடிக்கை எடுப்பார்கள். ஒரு காலத்தில் இந்து என்னும் சொல்லை சாதாரண மக்களிடம் ஒப்படைப்பார்கள் அதுவே இந்த நாட்டை அழிக்கும் என அம்பேத்கர் எழுதி உள்ளார், இன்று மத ரீதியாக பிரச்னையை உருவாக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர், அதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் அதிமுக எங்கே எனும் தேடும் நிலை ஏற்படும், அவர்களுடன் உள்ள கட்சியை மெல்ல விழுங்குவதுதான் பாஜகவின் திட்டம். இது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் உள்ள நபர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. இன்று அதிமுக மாற்று பாமகவைச் சார்ந்த நபர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி, எதிர்கட்சி பாஜக என கூறுவதற்காகவே அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்கிறார்” என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “இந்தியா கூட்டணியை பாஜக அஞ்சுகிறது. எதற்கும் அஞ்ச மாட்டோம் என கூறிய நபர்கள் இன்று இந்தியாவின் பெயரை மாற்றம் செய்ய நினைக்கின்றனர். நீங்கள் பெயர் மாற்றுவதில் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், அதற்கு காரணம் என்ன என கூற வேண்டும், மதசார்பற்ற என்ற நேர்கோட்டில் நாங்கள் ஒன்றுபட்டு உள்ளோம். மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் இந்தியாவை தகர்த்து எரிய வேண்டும் என நினைக்கின்றனர் அதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கி.வீரமணி பேசுகையில், “10 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த கூட்டணி, இன்றைக்கும், நாளைக்கும், என்றைக்கும் கூட்டணி எத்தனை கலகம் வந்தாலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். உதயநிநியின் பேச்சு மூலம் வாரிசாக மட்டும் அல்ல கொள்கை வாரிசுகள் என்று வெளிகாட்டப்பட்டுள்ளது. இந்த களம் போராட்ட களத்திற்கான ஆயத்த பாசரையாக பார்க்கிறேன். அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தாலும் மோடியை யூஸ் & த்ரோ (Use and Throw) என்பது போல பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் தூக்கி எரிவார்கள். இதுகுறித்த அவர்கள் பேசி வருகின்றனர் நிச்சயம் இந்த கருத்துக்கள் வெளியே வரும்.

விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு ஊக்கத்தொகை வழங்குவது மயக்க பிஸ்கட் வழங்குவது போல, பொது எதிரியை வீழ்த்த ஒன்றினைகிறோம். பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சியினருமே கருப்பு சட்டை தைத்து வைத்துள்ளனர். அடுத்தடுத்து கன்னி வெடி வைப்பது போல திட்டம் கொண்டு வருகின்றனர். சனாதனம் மனித தன்மைக்கு விரோதமானது என தெரிவித்த அவர் இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தமிழக அமைச்சர்கள், கொள்கையாளர்கள் உள்ளனர். புரிய வைக்க வேண்டியவர்களுக்கும், தெளிய வைக்க வேண்டியவர்களுக்கும் தெளிய வைப்போம் ஆர்எஸ்எஸ் காலத்திற்கு முடிவு கட்டுவோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சனாதனம் என மக்களை திசை திருப்புவதா.? திமுகவை நோக்கி ஓபிஎஸ் கேள்வி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.