ETV Bharat / state

கோலோச்சுமா கோலிவுட்? - கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்

author img

By

Published : Jul 5, 2021, 10:03 PM IST

Updated : Jul 5, 2021, 10:40 PM IST

கோலிவுட்
கோலிவுட்

முன்னணி தமிழ் நடிகர், இயக்குநர்கள் டோலிவுட் தயாரிப்பாளர்களை தேடிச் செல்லத் தொடங்கியுள்ளதால், இனி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மெல்ல வெளியேற்றப்படுவார்களோ என்ற அச்சம், கோலிவுட் வட்டாரத்தில் தொற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகை பொறுத்தவரையில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் கால்பதித்து புகழ்பெறுவதற்கு முன்னரே, இதே துறையில் புகழோடு வாழ்ந்தவர்கள் தயாரிப்பாளர்கள். அப்போதெல்லாம் மொத்த இந்திய திரையுலகமே சென்னையை சுற்றியே இயங்கும் வகையில், ஏராளமான ஸ்டுடியோக்கள் நிறைந்திருந்தன.

இதனால் தயாரிப்பாளர்களும் எந்தவித இடையூறு, அதிக பொருள் செலவின்றி திரைப்படங்களை எடுத்தனர். மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி ஸ்டூடியோ, ஏவிஎம் போன்றவை காலத்தால் அழியாத பல தமிழ் திரைப்படங்களை தன்னுள் உருவாக்கி உலகுக்கு கொடுத்தது.

தயாரிப்பாளர்களிடமிருந்து கை நழுவிய சினிமா

பெரும் புகழ்பெற்ற நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் போன்றோரும் இந்த திரைப்பட ஸ்டுடியோக்களின் மூலமே மக்கள் மத்தியில் புகழ்பெற்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

காலப்போக்கில் சினிமா மெல்ல தயாரிப்பாளர்களின் கையை விட்டு நழுவி மெல்ல நடிகர்கள் கையில் சிக்கிக் கொண்டது. பின்னர் ஒரு முன்னணி நடிகர், யாரை காட்டுகிறாரோ அவரே படத்தயாரிப்பாளர் எனும் நிலையாகிப் போனது. கதை தேர்வு செய்யும் உரிமை தயாரிப்பாளர்களின் கையில் இருந்து, நடிகர்களின் கைக்கு எப்போது மாறியதோ அப்போதே திரையுலகின் வீழ்ச்சியும் தொடங்கிவிட்டது. புகழின் உச்சத்தில் இருந்த நடிகர்கள், சம்பளத்தை உயர்த்தினால் மட்டுமே கால்ஷீட் என கூறத் தொடங்கினர்.

நசுக்கி தூக்கியெறியப்படும் தயாரிப்பாளர்

இதனால் திரைத்துறையில் புதிதாக நுழைந்த தயாரிப்பாளர்கள், தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பைனான்ஸியர்களை நாடி ஓடத் தொடங்கினர். இதனால் ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும்போதும், ஒரு தயாரிப்பாளர் நசுக்கப்பட்டு தூக்கி எறியப்படுவது வாடிக்கையாகிப் போனது.

மிகப்பிரபலமான நடிகரின் படம் தோல்வியுற்றாலும், அவரது அடுத்த படத்திற்கான சம்பளம் மட்டும் நம் நாட்டின் பணவீக்கம்போல் எகிறிக்கொண்டே செல்லும். ஆனால், ஒரு தயாரிப்பாளரின் திரைப்பயணத்திற்கு அன்றோடு முடிவுரை எழுதப்படுகிறது.

தயாரிப்பாளரின் நலனை பொருட்படுத்தும் நடிகர்களும், ’அத்தி பூத்தாற் போல்’ அரிதாகி போயினர். இதனால் வேறு வழியின்றி சுயநலத்துடன் இயங்கும் நடிகர்களுடனேயே மீண்டும் மீண்டும் பணி செய்யும் நிலையில் சில தயாரிப்பாளர்கள் இன்றளவும் கிடத்தப்பட்டுள்ளனர்.

பிற மாநில தயாரிப்பாளர்களின் ஆதிக்கம்

’கொடும, கொடுமன்னு கோயிலுக்கு போனா, அங்க ஒரு கொடும டிங்கு, டிங்குனு ஆடிட்டு வருமாம்’ என கிராமப்புறங்களில் ஒரு சொலவடை சொல்வதுண்டு. அதைப் போல நஷ்டங்களை மீட்டெடுக்க முயலும் கோலிவுட் தயாரிப்பாளர்களின் முயற்சிக்கு, பிறமாநில திரைப்பட தயாரிப்பாளர்களின் செயல் பேரிடியாய் அமைந்துள்ளது.

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் வேற்று மாநில தயாரிப்பாளர்களை நாடும் போக்கு அதிகரித்துள்ளது. நூற்றாண்டு கால இந்திய சினிமாவில் ஏவிஎம், ஜெமினி போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்களே, படத்தயாரிப்பில் தனித்து விடப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.

புற்றீசல் போல ஆங்காங்கே புதிதாக முளைக்கும் தெலுங்கு, இந்தி சினிமா தயாரிப்பாளர்கள் வரவு, தமிழ் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளின் உள்நுழைவால், கோலிவுட்டின் சினிமா தயாரிப்பு கட்டமைப்பே சில்லு, சில்லாய் சிதறி கிடக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம்

கோலிவுட்டில் கோலோச்சியுள்ள லைகா உள்ளிட்ட கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்கள், முன்னணி நடிகர்களை தங்களது கைப்பொம்மையாகவே மாற்றிவிட்டன. தங்களை பகைப்போரின் திரைப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விளையாடுவது கார்ப்பரேட் நிறுவனங்களின் பொழுதுபோக்காகவே மாறிடும் அளவுக்கு, அதன் அதிகாரம் திரைத்துறையில் பரந்து விரிந்திருக்கிறது.

தங்கள் படங்களில்தான் நடிக்க வேண்டும் என்பது முதல் யார் இயக்குநர், நடிகை என எல்லாவற்றையும் அவர்கள்தான் முடிவெடுத்துவருகின்றனர்.

தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் தாவல்

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கர், தற்போது தெலுங்கு வாரிசு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தை, தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான ”தில் ராஜூ”, தனது ஶ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

அதேபோல தன்னைத் தானே செதுக்கி, தனது நடிப்பால் ஹாலிவுட் சினிமா வரை சென்று ஜொலிக்கும் நிலைக்கு வந்துள்ளார் தனுஷ். இவர் அடுத்து தெலுங்கு முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ’பான் இந்தியா’ படமாக உருவாக உள்ள இத்திரைப்படத்தையும், தெலுங்கு தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆஃபிஸை வசூல் மழையில் நனைத்திடும், முன்னணி நடிகரான விஜய்யும் பீஸ்ட் படத்துக்கு பிறகு தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையும் முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் அஜித் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், ”வலிமை” படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்தது.

ஈரத்துணியில் பசியாற்றும் திரையரங்கு தொழிலாளர்கள்

கரோனா ஊரடங்கால் திரையரங்குகள் திறக்கப்படாததால், ஆயிரக்கணக்கான திரையரங்கு தொழிலாளர்கள் வயிற்றில் ஈரத்துணியை போட்டே இன்றளவும் பசியாறுகின்றனர்.

திரையரங்கு வெளியீட்டிற்கு குவிந்திருந்த படங்களில் ஏராளமானவை எப்போதோ ஓடிடி தளங்களின் பக்கம் தாவிவிட்டன. இதில் சில முன்னணி நடிகர்களின் படங்களும் அடங்கும். திரையரங்கில் வெளியிடும் கொள்கை பிடிப்பு கொண்ட தயாரிப்பாளர்கள், மிகுந்த கடன் பிரச்னையை சந்தித்து வருகின்றனர்.

ஆரோக்கியமான போட்டியே முன்னேற்றம்

ஆரோக்கியமான போட்டியே திரைத்துறையை முன்னேற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், டோலிவுட் திரைத்துரையின் முன்னேற்றம், கோலிவுட்டின் குரல் வலையை நெரிக்கும் விதத்தில் அமைந்துள்ளதே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் கதி கலங்கி நிற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை, கரை சேர்த்திட வேண்டியது முன்னணி தமிழ் இயக்குநர்கள், நடிகர்களின் கடமை என்பதை என்றும் அவர்கள் மறந்திடக்கூடாது. இனி வரும்காலங்களிலாவது கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களின் வாழ்வு இனிமையானதாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

Last Updated :Jul 5, 2021, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.