பள்ளி வருகை பதிவேட்டில் சாதி? - சென்னை மாநகராட்சி விளக்கம்

author img

By

Published : Nov 2, 2021, 2:32 PM IST

விளக்கம்
விளக்கம் ()

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் மாணவர்களின் வருகை பதிவேட்டில் சாதி குறிப்பிட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் ஒரே சமூகத்தை சார்ந்த மாணவர்கள் ஒரு பேட்ச்சில் அமர்த்தியதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையானதையடுத்து சென்னை மாநகராட்சி அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை: சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கீழ் 119 ஆரம்பப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. கரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் செப்டம்பர் மாதம் முதற்கட்டமாக கல்லூரிகள், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

நேற்று (நவ.1) ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று பேட்ச்சுகளாக (சுழற்சி முறையில்) மாணவர்கள் பள்ளிக்கு வர அரசு அறிவுறுத்தி உள்ளது.

சர்ச்சைக்கு விளக்கம்

இந்தநிலையில், மாநகராட்சி பள்ளி ஒன்றில் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வர ஒரே சமூகத்தை சார்ந்த மாணவர்கள் ஒரு சுழற்சியில் அமர்த்தியதாகவும், வருகை பதிவேட்டில் மாணவர்களின் சாதி குறிப்பிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், "பள்ளிகளில் சாதி அடிப்படையில் எந்த ஒரு விஷயமும் செய்வதில்லை. வருகை பதிவேட்டில் அல்ஃபாபெடிக் (Alphabetical order) அடிப்படையில் தான் மாணவர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளளது. எம்ஜிஆர் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வருகை பதிவேட்டில் சாதி குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியானது, இது தொடர்பாக அங்கு சென்று விசாரித்தோம்.

சாதி - சமூக நீதிக்கு எதிரானது

மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைக்கு ஏற்பாடு செய்ய, தகுதி வாய்ந்த மாணவர்களை கண்டறிய சில ஆசிரியர்கள் வருகை பதிவேட்டின் பின்புறம் குறித்து வைத்துள்ளனர். அதை உடனடியாக நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் சாதி தொடர்பான நிகழ்வு சமூக நீதிக்கு எதிரானது" என்றார்.

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் உடனடியாக பாடம் எடுக்காமல், அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப பாடம் எடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.