ETV Bharat / state

அரசு மருத்துவர்களின் ஊதியப் பிரச்னைக்குப் புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் தகவல்

author img

By

Published : May 19, 2022, 7:39 PM IST

அரசு மருத்துவர்களின் ஊதிய பிரச்சினைக்கு புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் தகவல்
அரசு மருத்துவர்களின் ஊதிய பிரச்சினைக்கு புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் தகவல்

அரசு மருத்துவர்களின் ஊதியப் பிரச்னை குறித்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை 354 மற்றும் 293 ஆகியவற்றை மாற்றம் செய்து புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை சைதாப்பேட்டையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என அதிமுக ஆட்சியின் பொழுது சட்டமன்றத்தில் பல்வேறு முறை கோரிக்கை வைத்தேன்.

ஆனாலும் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சீமாங் சென்டர் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. அதேநேரம், தற்போது சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 14 டயாலிசிஸ் இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

முதியோர் மருத்துவமனை திறப்பு: கிண்டியில் உள்ள கரோனா மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் மத்திய அரசிடம் கேட்டு முதியோர்களுக்கான மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. கட்டுமானப்பணிகள் நடைபெற காலதாமதமானதால், கரோனா தொற்றுக்காக இந்த மருத்துவமனையை கடந்த ஆட்சியாளர்கள் திறந்து வைத்தனர். தற்போது மூன்று மாதங்களாக கரோனா தொற்று பாதிப்பு இறப்பு இல்லாததால் இந்த மருத்துவமனையை மீண்டும் முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றுவது தொடர்பாக, மத்திய அரசிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனவே, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூரில் போலி மருத்துவர் சத்தியசீலன் சிகிச்சை அளித்து, 5 வயது குழந்தை இறந்தது தொடர்பான விசயத்தில், மினி கிளினிக் இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

புதிய அரசாணை: ஒரு முதலமைச்சராக இருந்தவருக்கு அம்மா மினி கிளினிக்குகளில் குழந்தைகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது கூட தெரியவில்லை. மேலும் இதற்காக பணியமர்த்தப்பட்ட 1,800 பேர்களிடமும் தாங்கள் எக்காலத்திலும் பணிநிரந்தரம் கேட்க மாட்டோம் என கையெழுத்து பெற்றனர். சத்தியசீலன் தஞ்சாவூரில் எம்பிபிஎஸ் படிப்பையும், சென்னை எழும்பூரில் முதுகலை மருத்துவ படிப்பையும் படித்துள்ளார். அவரின் சான்றிதழை வேறு ஒரு சத்தியசீலன் பெற்று புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ்களை வைத்து ஐந்து ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுதான் ஆகிறது. இந்த தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் கடந்த நான்காண்டுகளாக போலிச் சான்றிதழ் மூலம் மருத்துவமனையை சிறப்பாக நடத்தி வந்துள்ளார்.

சென்னை ஐஐடியில் சுகாதாரத்துறைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக மேலும் கூடுதலான நீட் பயிற்சி தொடங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

அரசு மருத்துவர்களின் ஊதிய பிரச்சினைக்கு புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் தகவல்

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசாணை 354 மற்றும் அரசாணை 293 என இரண்டு உள்ளன. இந்த இரண்டு அரசாணைகளையும் சேர்த்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய அரசாணை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பருத்தி நூல் விலை உயர்வு: ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பியூஷ் கோயலிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.