ETV Bharat / state

தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு தடை கோரிய வழக்கு! நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 8:37 PM IST

state-have-no-power-to-constitute-fact-finding-units-mhc-queries
சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் தவறான செய்திகளைக் கண்டறிய 'உண்மை சரிபார்ப்பு குழு' அமைக்கத் தடை கோரிய வழக்கு ஒத்தி வைப்பு!

State have no power to constitute fact finding units: சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான செய்திகளைக் கண்டறிவதற்காகத் தமிழக அரசு நியமித்துள்ள 'உண்மை சரிபார்ப்பு குழு' ஒரு தணிக்கை அமைப்பு தானே? இதில் என்ன தவறு? எனச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.

சென்னை: அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான, உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இந்த குழு அமைத்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட கோவையைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களைக் கண்காணிப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டுமெனத் தமிழ்நாடு டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், சமூக வலைத்தளங்களில் தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பகிரப்படுவதைத் தடுத்து, நடவடிக்கை எடுக்க சமூக ஊடக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்ததை ஏற்று, கடந்த மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மற்றொரு வழக்கை முடித்துவைத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் இல்லாமல் 'உண்மை சரிபார்ப்பு குழு' என்ற அமைப்பை அரசு அமைத்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டும் அல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி எனவும் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையின் வரம்பிற்கு வெளியே இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை.

இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து உள்ளது.

எனவே, 'உண்மை சரிபார்ப்பு குழு' அமைப்பது தொடர்பாக அக்டோபர் 6ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடைவிதிக்கவும், திட்ட இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் செயல்படத் தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், இது சம்பந்தமாக மத்திய அரசு ஏற்கனவே 2021 விதிகள் வகுத்துள்ளது. தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரி பார்ப்பு குழு, தகவல் தொழில் நுட்ப சட்ட விதிகளுக்கு முரணானது என்றார். மேலும், உண்மை சரிபார்ப்பு குழுவை அமைக்க மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது. இது மாநில அரசின் கையில் உள்ள ஆபத்தான ஆயுதம் எனத் தெரிவித்துள்ளார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பொய் செய்திகள் பரவுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறை தானே? இதில் என்ன தவறு ? காவல்துறைக்கு உதவத்தானே அமைக்கப்பட்டுள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குழுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பீகார் தொழிலாளர்கள் தொடர்பான தவறான தகவல்கள் பரவியது குறித்துச் சுட்டிக்காட்டினர். குழுவில் தகுதியான நபரைத் தான் அரசு நியமித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, மத்திய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த வழக்கின் முடிவைத் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறி, அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.