இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பிற்கு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வில் அறிவியல் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பதிவுக்கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டை சேவை மையங்களின் மூலம் ஜனவரி 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அறிவியல் பாடம், கருத்தியல் உள்ளிட்ட விண்ணப்பிக்கத் தகுதியான பாடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், 2012ஆம் ஆண்டிற்கு முன்பு அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற மாணாவர்கள் பழைய பாடத்திட்டத்தில் (2019 ல் இருந்த பாடத்திட்டம்) கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வினை எழுதலாம். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு நேரம் நீடிப்பு