ETV Bharat / state

தாயை கொன்ற மகன்: அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு

author img

By

Published : Nov 27, 2020, 12:17 PM IST

murder
murder

சென்னை: பெற்ற தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் பகுதியில் வசிக்கும் மகேஷ்(40), தனது தாயை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த மகேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மகேஷ் வேறு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். அதே வீட்டின் மேல் தளத்தில் இவரது தாயார் ஆதியம்மாள்(65) தனியாக வசித்து வந்தார்.

எப்போதும் அக்கம்பக்கத்தினரிடம் உரையாடும் ஆதியம்மாள் கடந்த 23ஆம் தேதி முதல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆதியம்மாள் வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகிலிருந்த நபர்கள் இன்று காலை காவல் துறையினருக்கு தகவலளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் ஆதியம்மாள் தங்கியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தனர்.

அப்போது வீட்டினுள் ரத்த சகதியில் ஆதியம்மாள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கீழ்தளத்தில் தங்கியிருந்த அவரது மகனான மகேஷை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில், கடந்த 23ஆம் தேதி தாயாருக்கும் தனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக மகேஷ் தெரிவித்தார். வாக்குவாதம் முற்றியபோது கீழே கிடந்த இரும்பு பைப்பால் தான்தான் தாயாரை அடித்து கீழே தள்ளிவிட்டு வீட்டை பூட்டியதாகவும் மகேஷ் ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் மகேஷை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சம்பவ இடத்தை அண்ணா நகர் துணை ஆணையர் பார்வையிட்டு சென்றனர். கொலை செய்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் மகேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.