ETV Bharat / state

ஓபிஎஸ் மகன் ஓபிஆர் மீது பாலியல் குற்றச்சாட்டு: வெவ்வேறு ரூபங்களில் சிக்கும் ஓபிஎஸ்!

author img

By

Published : Aug 1, 2023, 8:05 PM IST

Updated : Aug 1, 2023, 10:59 PM IST

ஓபிஎஸ் மகன் ஓபிஆர் மீது பாலியல் குற்றச்சாட்டு
ஓபிஎஸ் மகன் ஓபிஆர் மீது பாலியல் குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தப் பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

ஓபிஎஸ் மகன் ஓபிஆர் மீது பாலியல் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதியின் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை தருவதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அந்தப் பெண், “கடந்த 2014ஆம் ஆண்டு தனது தோழியின் திருமணத்தில் ஓபிஎஸ் அவர்களின் மகள் கவிதா, அவரது சகோதரர் ரவீந்திரநாத், மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. பின்பு ரவீந்திரநாத் மனைவி ஆனந்தியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.

இந்நிலையில், ரவீந்திரநாத் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து, அதன் காரணமாக கணவன் மனைவியான ரவீந்திரநாத் மற்றும் ஆனந்திகிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதே சமயம் கடந்த 2021ஆம் ஆண்டு எனக்கும் எனது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது.

இதனை அறிந்த ரவீந்திரநாத், கடந்த அக்டோபர் மாதம் 2022ஆம் ஆண்டு முதல் தனது நண்பனான முருகன் என்பவர் மூலமாக, தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருகிறார். மேலும், அவர் தனது வாட்ஸ்அப் மூலமாக மிக கேவலமான வார்த்தைகளில் தன்னை வர்ணித்து, தன்னுடன் வந்து உடலுறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருகிறார்.

அவரது விருப்பத்திற்கும் பாலியல் ரீதியான தொல்லைக்கும் அடிபணியாமல் இருப்பதால், தன்னைத் தொடர்ந்து குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார். இது குறித்து முன்னதாகவே தாம்பரம் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால், அந்தப் புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன்னிடம் போதுமான ஆதாரம் இருந்தும், இதுவரை அரசியல் செல்வாக்கு உள்ளதால் ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி., மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். இதனால், இன்று டிஜிபி-யை சந்தித்து புகார் அளிக்க வந்துள்ளேன்.

ஆனால், டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி இல்லாத காரணத்தினால் நாளை காலை எனது புகாரை பெற்றுக் கொள்வோம் எனக் கூறினார்கள். ஓ.பி. ரவீந்திரநாத் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருகிறார் என அவரது தந்தையான ஓபிஎஸ்-யிடம், கடந்த வருடம் நவம்பர் மாதம் நேரில் சந்தித்து கூறினேன். அதற்கு அவர், ரவீந்திரநாத் தன்னுடைய பேச்சையே கேட்பது இல்லை. தன்னுடைய மனைவி இறந்ததற்கு திதிக்கு கூட அவர் வரவில்லை எனக் கூறினார்.

இது அனைத்திற்கும் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் ரவீந்திரநாத் உள்ளார். முதலமைச்சர் தனிப்பிரிவு, பிரதமர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், ஆணையாளர் அலுவலகம் போன்றவற்றில் இது குறித்து புகார் அளித்து உள்ளேன். இதற்கு முடிவு தெரியாமல் இதனை நான் விடப்போவது இல்லை'' என அந்தப் பெண் கண்ணீர் மல்க ஆவேசத்துடன் கூறினார்.

முன்னதாக தேனி தொகுதியைச் சேர்ந்த பி.மாலினி என்பவர், ஓ.பி. ரவீந்திரநாத் மீது குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஓ.பி. ரவீந்திரநாத் வேட்பு மனுவில் தனது உண்மையான வருமான விவரங்களை மறைத்து பொய்யான விவரங்களை பூர்த்தி செய்து சட்டவிரோதமாக தாக்கல் செய்தார். அதனால் அவரின் வெற்றி சட்டத்திற்கு புறம்பானது என்றும் அவரின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமீபத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, வேட்பு மனுவில் தனது வருமானத்தில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதால், ஓ.பி. ரவீந்திரநாத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்டது முறையற்றது என்றும்; அதனால் அந்த தொகுதியில் அவரின் வெற்றி செல்லாது என்றும் அதிரடியாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஓ.பி. ரவீந்திரநாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவரின் மீது சுமத்தப்பட்ட இந்த பாலியல் குற்றச்சாட்டு, இவரை அரசியல் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: அரசியல் களத்தில் இணைந்த ஓபிஎஸ் - டிடிவி தினகரன்: கூட்டாக தேனியில் போராட்டம்!

Last Updated :Aug 1, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.