ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் கேப்சூல் மூலம் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 7:45 AM IST

சென்னை விமான நிலையம்
கேப்சூல் மூலம் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு 1.2 கிலோ கோக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்தவர்களிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை: எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து நேற்று (டிச.15) எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வரும் பயணி பெரிய அளவில் போதைப்பொருட்களை கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர், பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நைஜீரியன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில், அவர் தாம் ஆராய்ச்சி மேல்படிப்பிற்காக வந்ததாகவும், மருத்துவ பரிசோதனைக்கு வந்ததாகவும் மாறி மாறி கூறியுள்ளார்.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று எக்ஸ் ரே எடுத்து, அவரை முழுமையாக பரிசோதித்துள்ளனர். அதில், அவருடைய வயிற்றுக்குள் ஏராளமான கேப்சூல் மாத்திரைகளை விழுங்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இனிமா கொடுத்து, வயிற்றுக்குள் இருந்த 71 கேப்சூல்களை வெளியே எடுத்து பிரித்து பார்த்ததில், அதில் போதப்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, ரூ.12 கோடி மதிப்புள்ள 1.2 கிலோ கோக்கைன் போதைப்பொருளை 71 கேப்சூல்களில் மறைத்து கடத்தி வந்த நைஜீரிய இளைஞரிடம் இருந்து போதைப்பொருள்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், இவர் எந்த நோக்கத்திற்காக தங்கத்தை சட்ட விரோதமாக கடத்தி வந்தார், அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா, வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளதா, இவர் எத்தனை முறை விமானத்தில் சென்னை வந்துள்ளார், சென்னையில் யாரிடம் இந்த போதைப் பொருளை கொடுப்பதற்காக வந்துள்ளார் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏ-க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.