கள்ளச்சாராய மரணங்கள்; கல்லா கட்டித் தரும் அமைச்சர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? சீமான் கேள்வி

author img

By

Published : May 24, 2023, 8:41 PM IST

Etv Bharat

கள்ளச்சாராய விவகாரத்தில் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் 'அமைச்சர் செந்தில் பாலாஜி' மீது யார் நடவடிக்கை எடுப்பார்? இந்த துறையில் நல்ல வருமானம் ஈட்டி தருவார் என்று தான் அவரை முதலமைச்சர் நியமித்துள்ளார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளச்சாராய மரணங்கள்; கல்லா கட்டித் தரும் அமைச்சர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? சீமான் கேள்வி

சென்னை: தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 42வது நினைவு தினத்தை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "தமிழ் இன மக்களால் தமிழர் தந்தை என அழைக்கப்பட்டவர், அனைவரையும் அன்றாட அரசியலை அறியும்படி செய்தவர். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற முழக்கத்தை முன்வைத்தவர் சி.பா.ஆதித்தனார்.

இன்று தமிழ்நாடு சுடுகாடாக மாறி உள்ளது என்பதுதான் எதார்த்த நிலை. இந்த நிலையில் இருந்து மீள இருக்கின்ற வாய்ப்பு என்பது அரசியல் விடுதலைதான். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக உள்ளிட்ட ஜனநாயக பொறுப்பு கட்சிகள் புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது.

நாட்டின் பழங்குடி இன மக்களிலிருந்து குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அவரை ஏன் விழாவிற்கு அழைக்கவில்லை என்று கேட்டால் வேறு வேறு காரணங்கள் சொல்கிறீர்கள். இது எல்லாம் பெரிய விஷயமா? என்று கேட்கிறார்கள், பிரதமரில்லாமல் நாங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி இருக்கும்?.

இந்தியா என்பது குடியரசு நாடு, இந்தியாவின் முதல் குடிமகனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றால் எப்படி ஜனநாயக நாடாக இருக்கும்? இதை எதிர்க்க வேண்டும். ஆகவே மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதை எதிர்க்கும் போது அதை வரவேற்க வேண்டும்.

கள்ளச்சாராய விவகாரத்தில் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் 'அமைச்சர் செந்தில் பாலாஜி' மீது யார் நடவடிக்கை எடுப்பார்? இந்த துறையில் நல்ல வருமானம் ஈட்டி தருவார் என்று தான் அவரை முதலமைச்சர் நியமித்துள்ளார். ஆகவே செந்தில் பாலாஜிக்கு துறையாவது மாற்றி அமைக்க வேண்டும். அதை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை" என கூறினார்.

தொடர்ந்து முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து கேள்விக்கு பதிலளித்த சீமான், "சென்ற முறை துபாய் அரபு நாடுகளுக்கு சென்று தற்போது எவ்வளவு முதலீடுகளை முதலமைச்சர் ஈர்த்துள்ளார்? மேலும் இங்கு இருக்கக்கூடிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் 50 விழுக்காடாவது தமிழ் இளைஞர்களுக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்களா? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? வெளிநாடுகளுக்கு செல்வோம் முதலீட்டைக் கொண்டு வருவோம் என்று ஜெயலலிதா காலத்திலிருந்து நடைபெற்று வருகிறது. இதெல்லாம் நாடகம் என்று தெரியவில்லையா?" என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய சீமான், "6 லட்சத்து 50 ஆயிரம் கோடி தமிழகத்தில் கடன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள், தமிழகத்தில் எந்தெந்த துறையில் எவ்வளவு கடன், எதனால் கடன் உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமா அரசு? மரத்து நிழலில் நிற்க வேண்டும் வண்டியை நிறுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம், அதற்கு மரம் நட வேண்டும், முதலில் என்றும், இங்கே CLEAN INDIA இருக்கிறது ஆனால் GREEN INDIA இல்லை.

மேலும், அதிக வெப்ப நிலை ஏற்படுவதன் காரணமாக ஒன்னாம் தேதியிலிருந்து 15 நாட்களில் வெப்பம் தனிந்த பிறகு பள்ளிகள் திறக்க வேண்டும். அரசு அனைத்தையும் மக்கள் நலன் சார்ந்து தான் சிந்திக்க வேண்டும் என்பதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வேண்டிகோளாக வைக்கிறேன்.

பக்கத்து மாநிலங்களில் கள்ளு கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் கள்ளு கடைகளை திறந்து வைத்தால் ஆட்சியாளர்களின் கீழ் இயங்கி வரும் ஆலைகளுக்கு வருமானம் குறையும். அதனால் கள்ளை மதுவாக்கி மதுபானங்களை புனித நீர் ஆக்குகிற அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் ஆட்சிக்கு நாங்கள் வந்தால் கள்ளு கடைகளை திறப்போம் என்று கூறுகிறோம்.

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை மக்கள் தான் நடத்தினார்கள். இந்த பெருமைமிக்க தீர்ப்பை நீதிபதி வழங்கினார். அவருக்கு தான் பெருமை போய் சேர வேண்டும். ஒரு கல்லை கடைசி அடியில் அடிக்கும் போது இரண்டாக உடையும் ஆனால் அதற்கு முன்பு பல அடிகள் விழுந்துள்ளது, ஆகவே கடைசி அடி அடித்ததால் அந்த புகழ் முதல்வருக்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சிதான் எங்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த வேண்டும். பாஜக மாநிலங்களிலும் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் எதைப்பற்றி பேசி நகர்வது என்று தெரியாமல் கள்ளச்சாராயத்தை பற்றி பேசி வருகிறார்கள்" என கூறினார்.

இதையும் படிங்க: கள்ள சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்ஐ உட்பட ஐந்து போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.