தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? - விளக்கும் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்!

author img

By

Published : May 23, 2022, 9:59 PM IST

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது?

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்தும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனவும் பெற்றோர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் மாதத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மே 20ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தற்போது விடுப்பில் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளிகளை திட்டமிட்டப்படி திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகளின் சங்கமும், அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பத்தாம் வகுப்பு வரை நடத்தி முடித்துவிட்டன. 11ஆம் வகுப்பிற்கும் இடங்களைப் பதிவு செய்துள்ளன.

2022 - 2023ஆம் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு உரிய அறிவிப்பு இதுவரை பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படாமல் உள்ளது. இதனால் அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று காத்திருக்கும் பெற்றோர் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகாமல் உள்ளதால் திகைப்பில் உள்ளனர்.

ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கரோனா தாக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் என்பதால், பெற்றோர் வரும் கல்வி ஆண்டிலும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க முடிவெடுத்துள்ளனர்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர் கூறும்போது, “தமிழ்நாட்டில் 2022-23ஆம் கல்வியாண்டில் பள்ளிகளை திறப்பது குறித்தும், பள்ளிகள் செயல்படும் நாள்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும். வரும் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறையின் வேலைநாள்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும் விரைவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார்” என்றார்.

இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் அடுக்கு மாடி வளாகம் - பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலர்களுக்கு ரூ.79 லட்சம் அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.