ETV Bharat / state

பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரம் - காது கேளாத வாகன ஓட்டுநரால் நேர்ந்த விபத்து

author img

By

Published : Mar 29, 2022, 7:25 AM IST

Updated : Mar 29, 2022, 12:05 PM IST

பள்ளி மாணவன் உயிரிழப்பு
பள்ளி மாணவன் உயிரிழப்பு

விருகம்பாக்கத்தில் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறை நடத்திய விசாரணையில் வாகன ஓட்டுநருக்கு காதுகேட்காது என்னும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: விருகம்பாக்கம் இளங்கோ நகரைச் சேர்ந்தவர் தீக்ஷித் (7). வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று (மார்ச் 28) காலை வழக்கம்போல பள்ளி வாகனத்தில் பள்ளி வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கிய மாணவன், வாகனத்தின் முன் நின்று கொண்டிருந்தார். பின்னர் திடீரென பள்ளி வாகனம் இடதுபுறமாக திருப்பும்போது வாகனத்தின் முன் நின்று கொண்டிருந்த மாணவன் தீக்சித் மீது வாகனம் ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் தீக்சித் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வளசரவாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் தீக்ஷித் வாகனத்தின் முன் நின்று கொண்டிருந்தபோது வாகன ஓட்டுநர் வாகனத்தை இயக்கி மோதுவது போல் பதிவாகியிருந்தது. இதனையடுத்து பள்ளி வாகன ஓட்டுநர் முகலிவாக்கத்தை சேர்ந்த பூங்காவனம் (64) என்பவரை காவல் துறையினர் கைது செய்து அவர் மீது கொலையாகாத மரணத்தை விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், மாணவன் தீக்ஷித் பயணித்த பள்ளி வாகனத்தில் மொத்தம் 16 மாணவர்கள் வந்ததாகவும், அதில் ஒரு சில மாணவர்களை பள்ளி வாகன பாதுகாவலரான ஞானசக்தி என்பவர் அழைத்துச் சென்றதாகவும், தீக்ஷித் தனியாக நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், பள்ளி வாகன ஓட்டுநரான பூங்காவனத்திற்கு ஒரு காது கேட்கவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகி உள்ளது. வாகன ஓட்டுநர் பூங்காவனம் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்துவதற்கு முன்பு அருகில் இருந்த மாணவர்கள் சிலர் கூச்சலிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பூங்காவனத்திற்கு ஒருபக்க காது கேட்காததால் மாணவன் மீது மோதி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பூங்காவனம் மாநகராட்சியில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்று கடந்த ஆறு வருடங்களாக இந்த பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. பள்ளி வாகனத்திலிருந்து அஜாக்கிரதையாக மாணவனை விட்டுச் சென்றதாக பாதுகாவலர் ஞானசக்தி என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் பள்ளி தாளாளர் ஜெய சுபாஷ், முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீதும் கொலையாகாத மரணம் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு பள்ளியில் கொடுமை; குழந்தைகளை கழிவறை சுத்தப்படுத்த வைக்கும் ஆசிரியை!

Last Updated :Mar 29, 2022, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.