சர்வதேச புலிகள் தினம்: காட்டின் பாதுகாவலனை காத்திடுவோம்..

author img

By

Published : Jul 28, 2022, 9:52 PM IST

காட்டின் பாதுகாவலனை காத்திடுவோம்; சர்வதேச புலிகள் தினம்

சர்வதேச புலிகள் தினம் நாளை (ஜூலை 29) கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் புலிகள் பாதுகாப்பு மற்றும் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை: ஒரு காடு அனைத்து விதத்திலும் செழித்து இருப்பதற்கு உயிரினங்கள் சரியான விகிதத்தில் இருப்பது அவசியம். இல்லையேல் உணவு சங்கிலியில் பிறழ்சி ஏற்பட்டு உயிரினங்களும் தாவரங்களும் அழியும் சூழல் ஏற்பட்டுவிடும். உணவு சங்கிலியை காப்பதற்கும், பல்லுயிர் சூழலை பாதுகாக்கவும் காட்டில் புலிகளின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். ஏனென்றால் புலிகள் தான் காடுகளின் பாதுகாவலன். புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான் ஜூலை 29 சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவல் படி, இந்தியாவில் 2012 முதல் இதுவரை 1,059 புலிகள் இறந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த கால கட்டத்தில் 66 புலிகள் இறந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

காட்டின் பாதுகாவலனை காத்திடுவோம்

வேட்டை தடுப்பு காவலர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்

விஜய் கிருஷ்ணராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயக்கம், கூறுகையில்,"தமிழ்நாட்டை பொறுத்தவரை புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. எனினும் புலிகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் வனத்துறையில் குறிப்பாக முன்களப்பணியாளர்கள் என அழைக்கப்படும் வேட்டையாடுதலை தடுக்கும் ஊழியர்களின் காலியிடங்களை நிரப்ப வேண்டும். அவர்களுக்கு சரியான ஊதியத்தை வழங்க வேண்டும்.

இல்லையெனில் வேட்டையாடுதல் தொடர்ந்து புலிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் அதிகம். அனைத்து புலிகள் காப்பகங்களுக்கும் ஒரு மீட்பு மையத்தை அமைத்து கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும். புலிகளின் வாழ்விடத்தில் கால்நடைகளை மேய்க்கக்கூடாது என வலியுறுத்தியும் இந்த செயல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என தெரிவித்த அவர் இதனால் புலிகள் காடுகளின் அருகே உள்ள கிராமங்களுக்குள் வரக்கூடும். இதனால் மனித-விலங்கு மோதல் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது” என எச்சரித்தார்.

புலிகளின் வாழ்விடத்திற்கு போதுமான அளவு வளமான காடு வேண்டும்

வனவிலங்கு ஆராய்ச்சியாளர், கொ. அசோக சக்கரவர்த்தி, "தமிழ்நாட்டின் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் இது நல்ல விஷயமாக இருந்தாலும், புலிகளின் வாழ்விடத்திற்கு போதுமான காடுகள் உள்ளதா என ஆராய வேண்டும். மேலும் வாழ்விடம் நல்ல வளமாக இருக்க வேண்டும். ஏனெனில் வாழ்விடம் நன்றாக இருந்தால்தான் புலிகளுக்கு தேவையான உணவு குறிப்பாக மான், காட்டுப்பன்றி மற்ற வன உயிரினம் அதிக அளவில் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் என ஐந்து புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களில் புலிகளின் எண்ணிக்கை சற்று உயர்ந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த ஒரு வன உயிரினத்திற்கும் வாழ்விடம் முக்கியமான ஒன்றாகும், புலிகளின் எண்ணிக்கை நன்றாக இருந்தால் தான் நம்முடைய சுற்றுச்சூழலும் நன்றாக இருக்கும்” என்றார்.

புலிகள் பாதுகாப்பு முயற்சிகளுக்காக விருது பெற்றுள்ளோம்

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, ”நாட்டின் புலிகள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு தமிழ்நாட்டில் உள்ளது. 2018 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி, மாநிலத்தில் குறைந்தபட்ச புலிகளின் எண்ணிக்கை 264. புள்ளியியல் அடிப்படையில், இது 300 ஆக இருக்கலாம். புலிகளின் எண்ணிக்கை 2022 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், புலி மாநிலத்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட இனமாகும்.

கடந்த பல ஆண்டுகளாக மாநிலத்தில் புலிகள் வேட்டையாடப்பட்டதாக எந்த புகாரும் இல்லை. மாநிலத்தின் ஐந்து புலிகள் காப்பகங்களும் வேட்டையாடுதல் தடுப்பு முகாம்களின் பரந்த வலையமைப்பைக் கொண்டுள்ளன. அங்கு களப் பணியாளர்கள் புலிகளின் வாழ்விடங்களில் வழக்கமான ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றனர். உதாரணமாக புலி பாதுகாப்பு முயற்சிகளுக்காக 2022 விருதுக்கு எங்கள் முன்னணி ஊழியர்கள் மூவர் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என பெருமிதம் கொண்டார்.

இதையும் படிங்க: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா; கமல்ஹாசனின் குரலில் தமிழ் பண்பாட்டு நிகழ்த்துக் கலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.