ETV Bharat / state

46th Book Fair in Chennai: 'அரங்கு அமைப்பதில் பாகுபாடு' - பபாசி மீது குவியும் குற்றச்சாட்டுகள்

author img

By

Published : Jan 18, 2023, 8:09 PM IST

Updated : Jan 18, 2023, 9:50 PM IST

புத்தகக் கண்காட்சியில் (46th Book Fair in Chennai) ஸ்டால் அமைக்க பபாசி அனுமதி மறுத்ததால், பிரபல பதிப்பகமான சால்ட் பதிப்பகம், நடைபாதையில் கடை விரித்து புத்தகம் விற்ற சம்பவம் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

46th Book Fair in Chennai:சென்னை: இலக்கிய உலகில் நன்கு பரிட்சயமான ஒரு பதிப்பகம் சால்ட் பதிப்பகம் (Salt Publishing). கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை இந்த பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றது. சாகித்திய அகாதமியின் யுவ புரஷ்கார் விருது பெற்ற 'மரநாய்' என்ற கவிதைத் தொகுப்பு இவர்களின் பதிப்பில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பிரபலமான ஒரு பதிப்பகத்திற்கு, சென்னை புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு, அரங்கு ஒதுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பபாசியில் ஏறத்தாழ 500 உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், இதில் பலர் இரண்டு, மூன்று பெயர்களில் உறுப்பினராக உள்ளதாகவும் கூறுகின்றனர். இவர்களே இரண்டு, மூன்று பெயர்களில் அரங்குகளை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இரண்டு, மூன்று பெயர்களில் அரங்குகள் எடுத்துக்கொண்டாலும், ஒரே தலைப்பில் உள்ள புத்தகங்களே அனைத்து அரங்குகளிலும் இவர்களால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சர்ச்சை ஒரு புறம் இருக்க, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அரங்குகள் ஒதுக்குவதில் எந்த விதமான ஜனநாயக மரபையும் பபாசி அமைப்பினர் பின்பற்றவில்லை என்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உதாரணமாக, மேற்குறிப்பிட்ட சால்ட் பதிப்பகத்தின் உரிமையாளர் எழுத்தாளர் நரன், கடந்த 2022 டிசம்பர் 23ஆம் தேதியே அரங்கு ஒதுக்கக் கோரி, பபாசி அலுவலகத்தை அணுகியுள்ளார்.

அரங்கு ஒதுக்க லஞ்சமா?: அப்போது 26ஆம் தேதிக்குப் பிறகு தான் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் 26ஆம் தேதி சென்ற நரனை, பல காரணங்கள் கூறி பபாசி நிர்வாகம் அலைக்கழித்துள்ளது. அதன்பின்னும் பலமுறை நரன் படையெடுத்துள்ளார். இதனிடையே நிர்வாகத்தோடு தொடர்புடைய ஒரு நபர், நரனை அணுகி, இரண்டு லட்ச ரூபாய் நன்கொடை அளித்து அரங்கு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த நரன், தான் அலைக்கழிக்கப்பட்ட கோபத்தில் புத்தகக் கண்காட்சிக்கு வெளியே நடைபாதையில் தன்னுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்து விற்பனை செய்துள்ளார். இது, இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளும் கட்சி தொடர்புடைய யாரேனும் சிபாரிசு செய்தால் அரங்கு ஒதுக்கப்படலாம் என்றும் நரனுக்கு சிலர் அறிவுறுத்தி உள்ளனர்.

அதில் நாட்டமில்லாத நரன் நடைபாதையில் கடை விரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். தற்போது, அங்கு சர்வதேச புத்தகக் காட்சியை தமிழ்நாடு அரசு நடத்தி வருவதால், தற்காலிகமாக நடைபாதை கடைக்கு விடுமுறை அளித்துள்ளார், நரன். சர்வதேச புத்தகக் காட்சி முடிந்தவுடன் மீண்டும் நடைபாதையிலேயே கடை விரிக்கப் போவதாக கூறி வருகிறார். 'நாங்கள் அப்படித்தான். எங்களை யாரும் எதுவும் கேள்வி கேட்க முடியாது' என்ற வகையில் பபாசி நிர்வாகம் நடந்து கொள்வதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கின்றனர்.

ரூ.6.50 கோடி: புத்தகக் காட்சிக்காக ஒரு அமைப்பினை திறம்பட நடத்தி வருவது நல்ல செயல் என்றாலும், அரசிடம் நிதி பெறும் பபாசி நிர்வாகம், ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்காக, தமிழ்நாடு அரசு ஆறரை கோடி ரூபாய் பபாசி நிர்வாகத்திற்கு அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இது மட்டுமல்லாமல், புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருந்த திருநர்களின் 'குயர்' பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன.

தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநர்கள் பற்றிய விழிப்புணர்வு 'குயர்' பதிப்பகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களிடம் இவர்களுக்கு பக்கத்தில் அரங்கமைத்திருந்த ஒரு பதிப்பகத்தினர் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

புடவை உடுத்த வலியுறுத்தலா?: இதனை வேடிக்கை பார்த்த பபாசி அமைப்பினர், பிரச்னைக்குரிய பதிப்பகத்தாரைக் கண்டிக்காமல், 'குயர்' பதிப்பகத்தில் உள்ள திருநங்கைகள் சேலை அணிந்துதான் வரவேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய கட்டுப்பாடு விதித்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என பலரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சால்ட் பதிப்பகத்தின் உரிமையாளர் நரன்
சால்ட் பதிப்பகத்தின் உரிமையாளர் நரன்

இவ்விவகாரம் குறித்து சால்ட் பதிப்பகத்தின் உரிமையாளர் எழுத்தாளர் நரன் கூறுகையில், ‘பபாசி நிறுவனத்தில் அரங்கு கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டபோது, இறுதியாக, அவர்களிடம் இருந்து வந்த பதில், எங்களுடன் 15 ஆண்டுகளாகப் பயணித்தவர்களுக்கு மட்டுமே அரங்கு என்றார்கள். அதுமட்டுமல்லாமல், ’ஏன் சென்னை புத்தக காட்சிக்கு மட்டும் வர்றீங்க, மற்ற மாவட்டங்களில் நடந்தால் நீங்கள் எல்லாம் வரமாட்டீங்க’ எனவும் சொல்லி தட்டிக்கழித்தனர். மேலும், ஒரு குறிப்பிட்ட சாதியினரின் கைகளில் பபாசி இருக்கிறது. இது புதிதாக பதிப்பகம் நடத்த வருவோருக்கு, ஜனநாயகத்தன்மை கிடைக்க விடாமல் செய்துவிடுகிறது’ என்றார்.

தொடர்ந்து, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பபாசி நிர்வாகத்தின் மீது ஏற்படுவது இலக்கிய உலகிற்கு நல்லதல்ல என்று இலக்கிய ஆர்வலர்கள் பலரும் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் பெண்களுக்கான ஜல்லிக்கட்டு - கோழியைப் பிடித்து வென்றவர்களுக்கு பரிசு

Last Updated : Jan 18, 2023, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.