ETV Bharat / state

விசாரணைக் கைதி மீது துப்பாக்கிச்சூடு - கோவை காவல் ஆணையர் நேரில் ஆஜர்!

author img

By

Published : Mar 29, 2023, 10:29 PM IST

Chennai High court
சென்னை உயர்நீதிமன்றம்

காவல்துறையினரால் சுடப்பட்டவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தெளிவில்லாத ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.

சென்னை: மதுரையைச் சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடியை சுட்டுக்கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையைச் சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் அழைத்துச் சென்ற போது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.

தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் சஞ்சய் ராஜாவின் காலில் குண்டு காயம் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்தவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடக் கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சஞ்சய் ராஜாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர், ஆவணம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதைப் பார்த்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆய்வாளருக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர். தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் தெளிவாக இல்லாத காரணத்தால், கோவை காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (மார்ச் 29) சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம், ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணத்தைப் பார்த்ததாக தெரிவித்த ஆணையர் பாலகிருஷ்ணன், இனி இதுபோன்ற செயல் நடைபெறாது என்று நீதிபதிகளிடம் உறுதி அளித்தார். இனி வரும் வழக்குகளில், முறையான ஆவணம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.

பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, "மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடலூர் சிறைக்குச் சென்று சஞ்சய் ராஜாவை பார்த்தேன். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. சஞ்சய் ராஜாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்" என வாதாடினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ், சஞ்சய் ராஜாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறினார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தற்போதைய சிகிச்சையைத் தொடர உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற 4 பெண்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.