ETV Bharat / state

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சிறைபிடிப்பு..பொதுமக்கள் சாலைமறியல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 12:57 PM IST

Updated : Jan 3, 2024, 1:38 PM IST

Kilambakkam bus terminus
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

Kilambakkam bus terminus: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்துகளை அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சிறைபிடிப்பு

செங்கல்பட்டு: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில், கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய பேருந்து நிலையத்திலிருந்து முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஆகவே, பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறும் TNSTC இணையதளத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும், இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் மூலமாக இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்று வருகின்றன. இந்த நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகள் ஜிஎஸ்டி சாலையின் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றன.

பேருந்துகள் இயக்கப்படும் சர்வீஸ் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றுவர இந்த சர்வீஸ் சாலையையே பயன்படுத்தி வந்தனர். இதனிடையே பேருந்துகள் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி, அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்துகளை சிறைபிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள், தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜன. 3ல் தொடங்கும் சென்னை புத்தகக் கண்காட்சி-அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

Last Updated :Jan 3, 2024, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.