ETV Bharat / state

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எச்சரிக்கை.. 14 வகை தண்டனைகள் காத்திருக்கு.. பிட் அடித்தால் கடுமையான நடவடிக்கை..

author img

By

Published : Mar 10, 2023, 5:25 PM IST

Updated : Mar 10, 2023, 9:53 PM IST

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 வகை தண்டனைகள்!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 வகை தண்டனைகள்!

பொதுத்தேர்வின் போது மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பள்ளி மாணவர்கள், 23 ஆயிரத்து 747 தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத உள்ளனர். இந்த நிலையில் தேர்வு மையத்திற்குள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

இதன்படி, “தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போன் கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. தேர்வர்களது செல்போன் பராமரிப்பிற்கு, தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அது மட்டுமல்லாமல் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது பகுதி விடைகளையோ தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். இந்த குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படும்.

தேர்வர்கள் தேர்வின்போது அச்சடித்த புத்தகங்கள், கையேடுகள் அல்லது கையெழுத்துப் பிரதி ஏதேனும் தன் வசம் வைத்திருந்து, அதனை தாமாகவே அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தால், அவர்கள் முதன்மைக் கண்காணிப்பாளரால் எச்சரிக்கை செய்யப்படுவர். தேர்வர் இந்த தவறினை அதே பருவத்தில் மீண்டும் செய்தால், அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ விளக்கம் பெற்று வெளியேற்றப்படுவார். இருப்பினும், அடுத்து வரும் தேர்வுகளை எழுத அவர்களுக்கு தடையில்லை.

தேர்வர்கள் புத்தகம், துண்டுச் சீட்டுகளை வைத்திருப்பதை அறைக் கண்காணிப்பாளர் கண்டுபிடித்தால், தேர்வரிடமிருந்து எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற்று மையத்தை விட்டு முதன்மைக் கண்காணிப்பாளரால் வெளியேற்றப்படுவர். ஆனாலும், அடுத்து வரும் தேர்வுகளை எழுதத் தடையில்லை. தேர்வர் ஆட்சேபனைக்குரிய பொருட்களை தன்வசம் வைத்திருந்து, அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால், அன்றையத் தேர்வு ரத்து செய்யப்படும்.

தேர்வர் ஆட்சேபனைக்குரிய பொருட்களைத் தன் வசம் வைத்திருந்து பயன்படுத்தி இருந்தால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், மேலும் அடுத்த ஓராண்டு, அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும். தேர்வர்கள் அல்லது அவரைச் சார்ந்த நபர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொண்டு உதவி பெற நிர்பந்தித்து இருந்தது கண்டறியப்பட்டால், அந்தப் பருவத் தேர்வு தடை செய்யப்பட்டு, சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வரை தேர்வெழுத தடை விதிக்கப்படும்.

ஆள்மாறாட்டம் செய்தால், அந்தப் பவருத்தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், தேர்வு எழுத நிரந்தரத் தடை விதிக்கப்படும். வினாத்தாளை வெளியில் அனுப்புதல் தெரிய வந்தால், தேர்வு ரத்து செய்யப்பட்டு 3 ஆண்டுகள், அதாவது அடுத்தடுத்த 6 பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படும். மதிப்பீட்டு பணி, சிறப்பு கூர்ந்தாய்வின்போது அகச்சான்றுகளின் அடிப்படையில் பார்த்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பாடத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அடுத்து வரும் இருபருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் உள்ளிட்ட 14 வகையான தண்டனைகள் வழங்கப்படும்.

மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றது கண்டறியப்பட்டால், பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்திட பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலவச லேப்டாப் அல்லது டேப் வழங்கல்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..

Last Updated :Mar 10, 2023, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.