ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த அனுமதிகோரி மனு!

author img

By

Published : Sep 19, 2022, 8:08 PM IST

MHC

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வலியுறுத்தி, அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சென்னை: சென்னை மாங்காட்டைச்சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வில்லாக்கள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வில்லாக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து, 125 வில்லாக்களுக்கு முன் பணமாக 30 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த விவரங்கள் சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் உதவியாளரான ரமேஷ் என்பவருக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், பெங்களூரு சென்ற வழியில் தன்னைச் சந்தித்த சசிகலா, சில சொத்துகளை தனது பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தற்போது தன்னை சந்திக்க மறுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த உயிலை வெளியிடக்கோரி பல அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக்கோரி, அவரது சமாதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்ககோரி காவல் துறைக்கு மனு அளித்ததாகவும், அந்த மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளாரா? என்பதை அறிந்து தெரிவிக்கும்படி காவல் துறை தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு சென்னை மாநகரத்தில் குடிநீர் பஞ்சம் இருக்காது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.