ETV Bharat / state

வெற்றிக்கு உதவாத இரட்டை இலை; தோல்விக்கான காரணம் - அதிமுகவில் அடுத்த மூவ் என்ன?

author img

By

Published : Mar 2, 2023, 6:56 PM IST

Etv Bharat
Etv Bharat

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அதிமுகவின் வெற்றிக்கு ஏன் இரட்டை இலை சின்னம் உதவவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் தோல்விக்கான காரணம் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை...!

சென்னை: தமிழ்நாடே எதிர்பார்த்திருந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் மாபெரும் வெற்றிபெற்றார். ஆளுங்கட்சியான திமுகவின் 21 மாத கால ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி என்றும்; மதச்சார்பற்ற கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று முதல் இடைத்தேர்தல் என்பதாலும், அதிமுகவைப் பொறுத்தவரை இதன்மூலம் உட்கட்சி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தோடும் இடைத்தேர்தலை அணுகினர். தேர்தல் பணிகளில் ஆரம்பத்தில் தொய்வாக இருந்த திமுகவினர், அதிமுகவிற்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டது முதல் மிகவும் வேகமாக செயல்பட ஆரம்பித்தனர்.

இடைத்தேர்தல் அறிவித்தது முதலே அதிமுகவில் மிகவும் குழப்பமான நிலையே இருந்தது. இதற்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினரிடையே நடைபெற்றுக் கொண்டிருந்த ஒற்றைத் தலைமைக்கான யுத்தமே காரணம். இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு தரப்பினரும் முனைப்பு காட்டியதால் கூட்டணி கட்சிகளே யாருக்கு ஆதரவு கொடுப்பது என்று குழப்பம் அடைந்தனர்.

இறுதியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இரட்டை இலைச் சின்னம் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டதால் அதற்கு பின்னர் ஈபிஎஸ் அணிக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். வேட்பாளர் தேர்வு, சின்னம் கிடைக்குமா?; கிடைக்காதா, கூட்டணி கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்று ஒரு முடிவுக்கு வருவதற்குள் தேர்தல் பணிகளை தொடங்குவதற்கு அதிமுகவிற்கு காலதாமதம் ஏற்பட்டது. அதிமுக கூட்டணியில் ஆரம்பத்தில் பல குழப்பங்கள் இருந்தது என்பதை பெற்ற வாக்குகள் மூலமாக அதனுடைய முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது. பொதுவான வாக்காளர்கள் குழப்பமான கூட்டணிக் கட்சிகளை புறக்கணிப்பார்கள் என்பது இந்த இடைத்தேர்தல் முடிவில் தெரியவந்துள்ளது.

ops
ops

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியதும் இடைத்தேர்தலில் எதிரொலித்தாக கூறப்படுகிறது. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸை நீக்கிவிட்டு ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஈபிஎஸ் செயல்பட்டதால் இரட்டை இலைச் சின்னம் கிடைத்தும் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு கிழக்குத் தொகுதியை பொறுத்தவரையில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பதும் தோல்விக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

இரட்டை இலைச் சின்னம் ஈபிஎஸ் தரப்பினருக்கு கிடைத்தும் அதிமுக மோசமான தோல்வியைச் சந்தித்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்திருந்தாலும் கொங்கு பகுதி அதிமுகவின் கோட்டையாகவே விளங்கியதாக பார்க்கப்பட்டது. ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியும் கொங்கு பகுதியில் தான் உள்ளது. ஈரோடு கிழக்கில் கடந்த மூன்று சட்டப்பேரவை முடிவுகளை வைத்து பார்க்கும்போது 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், 2016ஆம் ஆண்டு அதிமுகவும், 2021ஆம் ஆண்டு காங்கிரஸும் வெற்றிபெற்றுள்ளனர்.

இதனை வைத்து பார்க்கும்போது கொங்கு பகுதிகளிலேயே ஈரோடு கிழக்கில் அதிமுகவிற்கான செல்வாக்கு குறைவாக இருப்பதும் தோல்விக்குக் காரணம் என பேசப்படுகிறது. இப்படி கூட்டணியில் உள்ள குழப்பம், அதிமுகவில் உள்ள உட்கட்சி பூசல், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பது போன்று பல்வேறு விவகாரங்கள் இரட்டை இலையை துளிர்விட செய்யாமல் இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தோல்விக்கு ஈபிஎஸ் தான் முழு காரணம் என்று ஓபிஎஸ் தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த தோல்விக்குப் பிறகு அதிமுகவில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கினாலும் அதில் உள்ள தீர்மானங்கள் குறித்து எதுவும் தெரிவிக்காததால் அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும்; இதனால் குழப்பங்கள் நீண்டு கொண்டே இருக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்பதற்கு சான்றாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமைந்துள்ளது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. அடுத்ததாக 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் அதிமுக வேகமாக செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் எதிர்காலம் என்பது எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை பொறுத்தே அமையும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷாம், "இந்த இடைத்தேர்தலை 'ஈரோடு கிழக்கு பார்முலா' என்று புதிய பெயரோடு எதிர்காலத்தில் அழைப்பார்கள். ஒற்றுமையின்மையே இடைத்தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம். இடைத்தேர்தல் வெற்றி என்பது பொதுத் தேர்தல்களுக்கு பொருந்தாது. அப்படி பொருந்தும் என்றால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக வெற்றிபெற்றது.

ஆனால், 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைத்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தோல்வியானது அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது. அதிமுகவில் இருக்கக்கூடிய சிக்கல்களை தீர்ப்பதே அடுத்தகட்டமாக இருக்க வேண்டும். இரட்டை இலைச் சின்னத்தில் ஜெயலலிதாவே தோல்வி அடைந்திருக்கிறார். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் இரட்டை இலை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இரட்டை இலைக்கு என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு என்றும் குறிப்பிடத்தக்க வாக்குகள் உள்ளன" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கை கைப்பற்றும் ஈவிகேஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.