ETV Bharat / state

மெட்ரோ திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 2:24 PM IST

chennai CMRL
சென்னை மெட்ரோ

Chennai CMRL: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன், 15 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரத்து 273 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது திட்டமதிப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே ஆகும்.

குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வழங்கும் மத்திய அரசு, தமிழகத்தை மட்டும் வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. சென்னை மாநகரின் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருக்கிறது. திட்டப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான், கடந்த 2020 நவம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

அதன்பின் மூன்றாண்டுகள் ஆகிவிட்ட போதிலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு மொத்தம் 7 முறை கடிதம் எழுதியும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மெட்ரோ திட்ட மதிப்பில் 15 விழுக்காட்டை பங்கு முதலீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், 10 சதவீத தொகையை மட்டுமே மானியமாக வழங்குவதாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்த சிக்கலில் கருத்தொற்றுமை ஏற்படாததும், இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிப்பது தாமதமாவதற்கு ஓர் காரணமாகும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 3 ஆண்டுகளாகியும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும், நிதி ஒதுக்கவும் மத்திய அரசு மறுப்பது சரியல்ல.

மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் முக்கியத்துவம் கருதி, 2023 - 2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.10 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியின் கடைசி இரு ஆண்டுகளில் முறையே ரூ.3 ஆயிரத்து 100 கோடி, ரூ.2 ஆயிரத்து 681 கோடி என மொத்தம் ரூ.15 ஆயிரத்து 781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றால், பணிகள் முடங்கும் ஆபத்து உள்ளதை மத்திய அரசு உணர வேண்டும். சென்னை மாநகரின் வளர்ச்சியிலும், பொதுப்போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதிலும் மெட்ரோ ரயில் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அத்தகைய திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதிலும், நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மத்திய அரசு தாமதம் காட்டக்கூடாது. டெல்லியில் அடுத்த வாரம் நடைபெற உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன், 15 சதவீதம் பங்கு முதலீடு வழங்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.2000 நோட்டுகளை மீண்டும் பயன்படுத்தலாம்..! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.