ETV Bharat / state

மிக்ஜாம் புயல்; சென்னையில் படிப்படியாக குறைந்து வரும் மழை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 7:25 AM IST

Cyclone Michaung in Chennai: சென்னையிலிருந்து மிக்ஜாம் புயல் ஆந்திராவை நோக்கிச் செல்வதால், புயலின் காரணமாக பெய்து வந்த கன மழையானது தற்போது குறைந்துள்ளது.

சென்னையில் மழை அளவு குறைந்துள்ளது
மிக்ஜாம் புயல்

சென்னை: மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழை தற்போது குறைந்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம் புயல்' காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதிகனமழையாக பெய்து வரும் நிலையில், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் வரலாறு காணாத மழையின் காரணமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மக்கள் அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து வெளியே வருவதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கத்தால், சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் ரயில் சேவை, விமான சேவை போன்றவை ரத்து செய்யப்பட்டன.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்று (04.12.2023) மற்றும் இன்று (05.12.2023) ஆகிய இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடி நிவாரணம் வழங்கி வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு அகன்று ஆந்திராவை நோக்கிச் செல்வதால், தற்போது மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு கால்வாய்களில் தேங்கிய மழைநீர் வடியத் தொடங்கியுள்ளதால், வெள்ளநீர் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: MICHAUNG புயல் எதிரொலி: சென்னை - தென் மாவட்டங்கள் - சென்னை ரயில் சேவைகள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.