கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திருநங்கைகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் 15 நாள்களுக்குத் தேவையான மளிகை பொருள்களை 500 திருநங்கைளுக்கு வழங்கியுள்ளார்.
இதனை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள திருநங்கை காப்பகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவியிடம் வழங்கினார். மேலும், இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி கூறும்போது, ”திருநங்கைகள் மீது எப்போதும் அன்பு கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் 500 திருநங்கைகளுக்கு 15 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வழங்கியுள்ளார். இதனை காவல் துறை அனுமதியுடன் சென்னையிலுள்ள திருநங்கைகளுக்கு வழங்க உள்ளோம். கரோனா தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்.
நாங்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் எங்களின் நலனை கருத்தில் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் அளிப்பது போல் எங்களுக்கும் தமிழ்நாடு அரசு 2000 ரூபாய் சிறப்பு நிவாரணமாக அளிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரம் திருநங்கைகள் உள்ளோம். எனவே எங்களுக்கு உதவ விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறையின் அனுமதி பெற்று உதவலாம்” என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: